பெங்களூரு அணிக்கு பாராட்டு விழா நடத்த அதிகாரிகள் எதிர்ப்பா? முதல்வர் சித்தராமையா சொன்ன தகவல்

9

பெங்களூரு: கர்நாடகாவில் சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.


பெங்களூரு அணிக்கான பாராட்டு விழா நடந்த சின்னசாமி மைதானத்தின் வெளியே நடந்த கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்த முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் ஆறுதல் கூறினர்.


இதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.


அவர் கூறியதாவது; பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். இந்த துயர சம்பவத்திற்கு அரசு துக்கம் அனுசரிக்கிறது.


நாம் எதிர்பார்த்ததை விட மக்கள் அதிகமாக கூடினர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விதான சவுதா முன்பு நடந்த நிகழ்ச்சியில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால், சின்னசாமி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது, ரசிகர்கள் முண்டியடித்து சென்றதால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.


கிரிக்கெட் வாரியமும் இவ்வளவு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. சின்னசாமி மைதானத்தில் 35 ஆயிரம் பேர் அமரும் வசதியுள்ளது. பாராட்டு விழாவை பார்ப்பதற்காக 2 முதல் 3 லட்சம் பேர் வரை அங்கு குவிந்தனர். நேற்று பெங்களூரு அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று காலை பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இவ்வளவு கூட்டம் வரும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சின்னசாமி மைதானத்தில் இருக்கைகள் இருக்கும் அளவுக்கு தான் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தோம். மீறிப்போனால், சில ஆயிரம் பேர் மட்டும் கூடுதலாக வருவார்கள் என்று நினைத்தோம்.


உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கும். காயமடைந்தவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கான செலவுகளை அரசே ஏற்கும். மொத்தம் 47 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் சிகிச்சை பெற்று விட்டு வீடு திரும்பிவிட்டனர். காயமடைந்தவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு உணவு முதல் போக்குவரத்து வரை அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்ளும். நீதி விசாரணைக்கு உத்தரவிடுகிறோம். யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.


நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. பா.ஜ.,வின் அரசியலுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். பாதுகாப்பு குறைபாடா? அல்லது வேறு எதாவது காரணமா? என்பது விசாரணையில் தெரிய வரும்.

மைதானத்திற்கு உள்ளே செல்வதற்கான நுழைவு வாயில் சிறியதாக இருக்கும். ஒரே சமயத்தில் ரசிகர்கள் உள்ளே செல்ல முயன்றதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. இந்த பாராட்டு விழா குறித்து ஆலோசனை நடத்தும் போது, யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சில அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை.


இதுபோன்ற கூட்டநெரிசல் சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்தது. இது எதிர்பாராமல் நிகழ்ந்ததாக கருதுகிறேன். விதான சவுதாவில் நிகழ்ச்சி நடத்த நாங்கள் முடிவு செய்யவில்லை. கர்நாடகா கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டதன் பேரில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement