விராட் கோலி பார் மீது வழக்கு

1

பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லிக்கு சொந்தமான, பெங்களூரில் உள்ள பார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



பொது இடங்களில் புகை பிடிப்பது, ஹூக்கா பார் நடத்துவதற்கு கர்நாடக காங்., அரசு தடை விதித்துள்ளது.


இதன்படி, பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது. பார் அண்ட் ரெஸ்டாரென்ட், பப், கிளப்களில் புகை பிடிக்க தனியிடம் ஒதுக்க வேண்டும். இந்த விதிமுறையை மீறுவோர் மீது வழக்கு தொடரப்படும்.



பெங்களூரு எம்.ஜி., சாலை அருகில் உள்ள, 'ஒன் 8 கம்யூன் பார் அண்டு ரெஸ்டாரென்ட்' இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு சொந்தமானது. இங்கு புகை பிடிக்க தனியிடம் ஒதுக்காமல், உணவருந்தும் இடத்திலேயே புகை பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.


கப்பன் பூங்கா போலீசார், மே 29ம் தேதி இந்த பாருக்கு சென்று சோதனை நடத்தியபோது, விதிகளை மீறியது தெரிந்தது. இதுகுறித்து, நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று, அந்த பார் மீது நேற்று வழக்கு பதிவு செய்தனர்.


இந்த பார் மீது வழக்கு பதிவாவது, இது முதன் முறையல்ல. 2024 ஜூலை 6ம் தேதி, அதிகாலை 1:20 மணி வரை பார் திறந்திருந்தது. இதற்காக, கப்பன் பூங்கா போலீஸ் நிலையத்தில் எப்.ஐ.ஆர்., பதிவானது.


இதையடுத்து, தீயணைப்பு துறையிடம் அனுமதி பெறாமல், மாநகராட்சி உரிமமின்றி, பார் அண்ட் ரெஸ்டாரென்ட் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, இந்த பாருக்கு, 2024 டிசம்பரில், பெங்களூரு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Advertisement