ஆப்பரேஷன் சிலந்தி வலை ரஷ்யாவுக்கு உக்ரைன் 'ஷாக்'

கீவ் : ஆப்பரேஷன் சிலந்தி வலை என்ற பெயரில், ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல், உலக நாடுகளை மிரள வைத்துள்ளது. இந்த தாக்குதலில், 30 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது, ரஷ்யாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022 பிப்.,ல் ரஷ்யா போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாகவும் இந்த போர் தொடர்கிறது.


போர் நிறுத்தம் தொடர்பாக, பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், எந்த நிபந்தனைகளுக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புக்கொள்ளவில்லை.



ஐரோப்பிய நாடான துருக்கியின் இஸ்தான்புல்லில், நேற்று இரு தரப்புக்கும் இடையே அமைதி பேச்சு துவங்குவதாக அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், நேற்று முன்தினம், ரஷ்யாவின், ஐந்து விமானப்படை தளங்களை குறிவைத்து, உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதில், ரஷ்யாவின், 30 போர் விமானங்கள் தகர்க்கப்பட்டன.


'ஆப்பரேஷன் ஸ்பைடர் வெப்' எனப்படும் ஆப்பரேஷன் சிலந்தி வலை என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல், இந்த போரில் நடந்த உச்சபட்ச பாதிப்பை ரஷ்யாவுக்கு ஏற்படுத்தியுள்ளது. மேலும், உக்ரைன் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலாகவும் இது உள்ளது.


இது மிகவும் விரிவாக திட்டமிடப்பட்டு, சரியான நேரத்தில், சரியான வகையில் செயல்படுத்தப்பட்டதாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.


கறுப்பு தினம்

ரஷ்யா - உக்ரைன் போர் மூன்றாண்டை கடந்தும் தொடர்கிறது. தற்போது கிரீமியா உட்பட உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பு ரஷ்யாவின் வசம் உள்ளது. கடந்த மே 30ல், ரஷ்யா, உக்ரைன் மீது 472 ட்ரோன்கள், 7 ஏவுகணைகளை ஏவி பெரிய தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக நேற்று முன்தினம் உக்ரைன் 'ஆப்பரேஷன் ஸ்பைடர்வெப்' என்ற பெயரில் ட்ரோன் வாயிலாக ரஷ்யாவின் ஐந்து விமானப்படை தளத்தை தாக்கியது. இது 'கறுப்பு தினம்' என ரஷ்யா அறிவித்துள்ளது. ட்ரோன் சிறப்பம்சம்தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் பயன்படுத்திய 'எப்.பி.வி.,' ட்ரோன் முழுதும் உக்ரைனின் சொந்த தயாரிப்பு என அந்நாடு தெரிவித்துள்ளது. இதில் பறக்கும் மிஷின், கேமரா வசதிகள் உள்ளன. இதிலுள்ள கேமரா நேரடி வீடியோ வசதியை ட்ரோன் ஆப்பரேட்டருக்கு வழங்குகிறது. இதன் வாயிலாக ட்ரோன் பார்ப்பதை, ஆப்பரேட்டரும் நேரடியாக பார்க்க முடியும். இலக்குகளை துல்லியமாக தாக்கும். இதன் தயாரிப்பு செலவு குறைவுதான். ஒரு ட்ரோனின் விலை 3.40 லட்சம் ரூபாய். இந்தாண்டில், 45 லட்சம் ட்ரோன்கள் வாங்க உக்ரைன் ராணுவம் திட்டமிட்டுள்ளது.தாக்குதல் எப்படி?இத்தாக்குதலுக்காக ஒன்றரை ஆண்டாக உக்ரைன் திட்டமிட்டுள்ளது. உக்ரைனின் உளவு அமைப்பான எஸ்.எஸ்.யு., இதை நடத்தியது. ரகசியமாக கன்டெய்னரில் ட்ரோன்களை வைத்து ரஷ்யாவுக்குள் அனுப்பி, விமான தளங்களின் அருகில் மரத்திலான அறையில் மறைத்து வைத்துள்ளனர். அதிலிருந்து ட்ரோன்களை இயக்கி இலக்குகளை தாக்கினர். ஐந்து விமானப்படை தளங்களில் ஒன்றான பெலாயா விமான தளம், உக்ரைனில் இருந்து 4,500 கி.மீ., துாரத்தில் உள்ளது. ரஷ்யாவுக்குள் இவ்வளவு துாரத்துக்கு உக்ரைன் தாக்குவது இதுவே முதல்முறை. 117 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இத்தாக்குதலில் ரஷ்யாவின் 34 சதவீத போர் விமானங்கள் அழிக்கப்பட்டன என உக்ரைன் தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு 50,000 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Advertisement