'பூத்' கமிட்டி நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க., தலைமை கட்டுப்பாடு

தேனி: 'பூத்' கமிட்டியில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகளின் புகைப்படங்களை, ஜூன் 15க்குள் அனுப்பும்படி அ.தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 2026ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை அரசியல் கட்சியினர் துவக்கி உள்ளனர். அ.தி.மு.க., சார்பில் ஓட்டுச்சாவடி வாரியாக பூத் கமிட்டி அமைக்கும் பணி, சில மாதங்களுக்கு முன் துவங்கியது. அந்த கமிட்டிகளில் இடம் பெறுவோர், 35 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒரு கமிட்டியில், ஆறு ஆண்கள்; மூன்று பெண்கள் என ஒன்பது பேர் இருக்க வேண்டும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பூத் கமிட்டி உறுப்பினர்களின் குழு புகைப்படம், இவர்களின் வாக்காளர் அட்டை விபரங்களை அனுப்புமாறு அ.தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது. மேலும், பூத் கமிட்டியில் இடம் பெற்றுள்ளவர்கள், கூட்டணி கட்சியினருடன் இணைந்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் பங்கேற்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.