ஆப்பரேஷன் சிந்துாரில் பாகிஸ்தானின் ஒன்பது போர் விமானங்கள் அழிப்பு

புதுடில்லி: பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, அந்நாட்டின் ஒன்பது போர் விமானங்கள், 10க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வான் வழியாக நடந்த போரில், பாகிஸ்தான் விமானப்படைக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் ஆறு போர் விமானம், இரண்டு விலை உயர்ந்த கண்காணிப்பு விமானம், ஒரு சி - 30 போக்குவரத்து விமானம், 10க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் பல்வேறு ட்ரோன்களை நம் ராணுவப்படை அழித்தன.

பாக்.,கின் பொலாரி விமான தளத்தில் இருந்த சுவீடன் நாட்டு தயாரிப்பு விமானம் அழிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போர் விமானங்களும், நம் ராணுவப் படையின் தாக்குதலில் முற்றிலும் அழிந்தன.

இந்த தாக்குதலின் போது, சீன தயாரிப்பான 'விங் லுாங்' ஆளில்லா விமானங்களும் வீழ்த்தப்பட்டன. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் உள்ள இடிபாடுகளை பாகிஸ்தான் அகற்றாததால், பாதிப்பு விபரங்களை கணக்கிட முடியவில்லை-.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement