இந்திய பயணம் வாழ்நாளின் சிறப்பு: பிரதமரை வானளாவ புகழ்ந்த உஷா வான்ஸ்

வாஷிங்டன்; இந்திய பயணம் வாழ்நாளில் சிறந்தது, பிரதமர் மோடியுடான சந்திப்பு சிறப்பு வாய்ந்தது என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மனைவி உஷா வான்ஸ் பூரிப்புடன் கூறி உள்ளார்.
அமெரிக்காவின் துணை அதிபராக இருப்பவர் ஜே.டி. வான்ஸ். இவரின் மனைவி உஷா வான்ஸ். இவரை அமெரிக்காவின் செகண்ட் லேடி என்று அழைக்கின்றனர். இவரின் பூர்வீகம் ஆந்திரா. 1970களில் அமெரிக்காவிக்கு இவர்களின் குடும்பம் புலம்பெயர்ந்தது.
ஏப்ரல் மாதம் ஜே.டி. வான்ஸ், தமது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இந்தியா வந்திருந்தார். அந்த சுற்றுப்பயணம் குறித்தும், பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்தும் உஷா வான்ஸ், அமெரிக்காவில் வாஷிங்டனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது உஷா வான்ஸ் கூறியதாவது: பிரதமர் மோடி மிகவும் சிறப்பு வாய்ந்தவர். எனது குழந்தைகள் அவரை தங்களின் தாத்தா ஸ்தானத்தில் வைத்துள்ளனர். அவரை மிகவும் நேசிக்கின்றனர். இந்தியாவுக்கு வந்தபோது, அவரது வீட்டுக்குச் சென்று கட்டிப்பிடித்தனர்.
இந்திய பயணம் எங்கள் வாழ்நாளிலேயே சிறந்த பயணம். என் குழந்தைகள் இந்தியா சென்றது இல்லை. ஆனாலும், இந்தியாவின் சூழல், அந்த நாட்டை பற்றி, அங்குள்ள உணவு முறைகள், தாத்தா, பாட்டி உள்ளிட்ட பலரின் உறவுகள் பற்றி தெரிந்து கொண்டு வளர்ந்தார்கள்.
மிகவும் நம்பமுடியாத பயணமாக இருந்தது. எனக்கும், ஜே.டி. வான்சுக்கும் இதைவிட சிறந்த தருணம் வேறு எதுவும் இருக்க முடியாது.
வட இந்தியாவில் சிறந்த இடங்களை பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. எனது குடும்பத்துடன் மீண்டும் ஒரு முறை இந்திய பயணத்தை எதிர்நோக்குகிறோம்.
பிரான்சில் தமது 5 வயது மகனுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் பரிசு வழங்கியதை மறக்கவே முடியாது. என் குழந்தைகளிடம் அன்பாகவும், தாராள மனப்பான்மையுடனும் பிரதமர் மோடி நடந்து கொண்டார். அவர்கள் பிரதமரை விரும்புகிறார்கள். அன்று என் 5 வயது குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு கொடுத்து தமது அந்தஸ்தை உண்மையிலேயே உறுதிப்படுத்தினார்.
இவ்வாறு உஷா வான்ஸ் கூறினார்.


