கிரிக்கெட் சூதாட்டத்தில் ஏ.ஐ., தொழில்நுட்பம்; புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி; பிரீமியர் லீக் கிரிக்கெட் இறுதி போட்டியின்போது நடந்த சூதாட்டத்தில், புதுச்சேரியில் 'ஏ.ஐ.,' தளங்களை பயன்படுத்தி பல லட்சம் ரூபாயை வென்றிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22ம் தேதி துவங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில், இறுதி போட்டி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று முன்தினம் நடந்தது.

இதுவரை கோப்பை வெல்லாத இரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி, கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த வெற்றியை ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிரிக்கெட் சூதாட்டம் நடந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் மோதிய ராயல் சேலஞ்சர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மீது, புதுச்சேரியில் உள்ள 'புக்கி'கள் எனப்படும் கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள், நேற்று முன்தினம் காலை முதலே கிரிக்கெட் ரசிகர்களை அணுகி பந்தயத் தொகையை சேகரிக்க துவங்கினர்.

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அணிகளின் முந்தைய ஆட்டங்களை அடிப்படையாக கொண்டே பந்தயம் கட்டுவது வழக்கம். ஆனால், நேற்று முன்தினம் நடந்த இறுதி போட்டியில் 'புக்கி'களின் ஆலோசனைப்படி தங்களின் மொபைல் போன்களில் உள்ள செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தளங்களில் எந்த அணி வெற்றி பெறும் என கேட்டு பந்தயத் தொகையை கட்டி உள்ளனர்.

அதில், அன்று மதியம் வரை பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெறும் என சில ஏ.ஐ., தளங்கள் கூறி வந்தன. மாலையில் திடீர் திருப்பமாக, ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெல்லும் என செயற்கை நுண்ணறிவு தளங்கள் தகவல் தெரிவித்தன.

இதனால் உற்சாகமடைந்த கிரிக்கெட் ரசிகர்கள், பஞ்சாப் அணியை தவிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் அணி மீது பந்தய தொகையை அதிகப்படுத்தினர். இதனால் ஒரே நேரத்தில் பல லட்சம் ரூபாய்க்கு பந்தய தொகை எகிறியது.

ஏ.ஐ., தளங்கள் வெளியிட்ட தகவல்படி, ராயல் சேலஞ்சர் அணியும் வெற்றி கோப்பையை தட்டி சென்றது. இதனால், பந்தயத்தில் பல லட்சம் ரூபாய் வென்றவர்கள் 'புக்கி'களுக்கு பல ஆயிரம் ரூபாயை வாரி வழங்கியுள்ளனர்.

Advertisement