காரைக்கால் நீதிமன்ற பெட்டகத்தில் தங்க நகைகள் மாயம்

புதுச்சேரி; காரைக்கால் கோர்ட் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வழக்கு சம்மந்தப்பட்ட நகைகள் காணாமல் போனது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்கால் கோர்ட்டில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் பாதுகாப்பாக ஒரு பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்தன. இதனை பராமரிக்கும் பொறுப்பு ஹெட் செரஸ்தார் குணசேகரன் வசம் இருந்தது.

இந்நிலையில், குணசேகரன் அந்த பொறுப்பில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டு, பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.

ஆனால் அவர் நிர்வகித்து வந்த அந்த பாதுகாப்பு பெட்டகத்தின் சாவியை கோர்ட்டில் ஒப்படைக்காமல் இருந்து வந்தார்.

இதையடுத்து, கோர்ட் நிர்வாகம் அந்த பெட்டகத்தை திறந்து ஆய்வு செய்தபோது, அதிலிருந்த தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் மாயமாகி இருந்தன.

இது தொடர்பாக நீதிமன்ற ஊழியர் சங்கர் வடிவேலு, கோர்ட் நிர்வாகம் சார்பில், புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் தனசேகர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

விசாரணைக்கு பிறகே எவ்வளவு நகைகள் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இதில், யார் யாருக்கு தொடர்பு உள்ளது என தெரியவரும்.

Advertisement