சுற்றுச்சூழலை காக்கும் ஹீரோக்கள் தான் வனக்காவலர்கள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

7


சென்னை: ''வனக்காவலர்கள் தான் காடுகளின் முதுகெலும்பு. நமது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஹீரோக்கள் நீங்கள் தான்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை வர்த்தக மையத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் நடந்த விழாவில் முதல்வர் பேசியதாவது: இன்று உலக சுற்றுச்சூழல் நாள் மட்டுமல்ல; நாம் வாழும் பூமி கடும் நெருக்கடியில் இருக்கின்றது என்னும் கடினமான உண்மையை உணர கூடிய நாள். காடு தான் இந்த புவி மூச்சுவிட உதவும் நுரையீரல்.

முதுகெலும்பு



நமது குழந்தைகளின் எதிர்காலம், நாம் இப்போது செய்யும் செயல்களை பொறுத்தே இருக்கும்.
வனக்காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் தான் காடுகளின் முதுகெலும்பு, நமது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஹீரோக்கள் நீங்கள் தான். காடுகள் எல்லாம் மேப்பில் தெரிவது போல் பச்சை திட்டு என சாதாரணமாக எண்ணிவிடக் கூடாது.

அடித்துச் சொல்கிறேன்




இந்தியாவிலேயே சுற்றுச்சுழல் பாதுகாப்புக்காக, தமிழகத்தை போல் வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு திட்டங்கள், இயக்கங்கள் இல்லை என்று நான் அடித்துச் சொல்கிறேன். 1,207 ஹெக்டேர் தரம் குன்றிய சதுப்பு நிலக் காடுகளை மீட்டெடுத்துள்ளோம். பல்லுயிர் பெருக்கம், காலநிலை மாற்றத்துக்கு இடையே வலுவான தொடர்பு உள்ளது. தமிழக பசுமை இயக்கம் மூலம் 10 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடவு செய்துள்ளோம்.

வேறு வழியில்லை



மீண்டும் மஞ்சப்பை திட்டம் அரசின் திட்டமாக இருந்தால் போதாது. மக்கள் இயக்கமாக மாற வேண்டும். திட்டங்களை அரசு கொண்டுவரத்தான் முடியும்; அதன் வெற்றி, மக்கள் தங்கள் அன்றாட பழக்கங்களை மாற்றிக்கொள்வதில் தான் உள்ளது. ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும்; ஆனால் வேறு வழி இல்லை. துணிப்பை, தண்ணீர் பாட்டில் இல்லாமல் வெளியே செல்லமாட்டோம் என்ற உறுதிமொழியேற்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement