முதல் கோப்பை வென்றது பெங்களூரு அணி

1

ஆமதாபாத்: பிரிமியர் கிரிக்கெட் அரங்கில் முதல் முறையாக கோப்பை வென்று அசத்தியது பெங்களூரு அணி. கோலியின் 18 ஆண்டு கனவு நனவானது. நேற்றைய பைனலில் தோற்ற பஞ்சாப் அணி, இரண்டாவது இடம் பெற்று ஆறுதல் அடைந்தது.
ஆமதாபாத் மோடி மைதானத்தில் நேற்று நடந்த 18வது பிரிமியர் கிரிக்கெட் தொடரின் பைனலில் பெங்களூரு, பஞ்சாப் மோதின. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
ஷ்ரேயஸ் வியூகம்
பெங்களூரு அணிக்கு துவக்கத்தில் பில் சால்ட் (16) ஏமாற்றினார். பின் அனுபவ கோலி, மயங்க் அகர்வால் விவேகமாக விளையாடினர். அர்ஷ்தீப் பந்தை சிக்சருக்கு அனுப்பினார் அகர்வால். மறுபக்கம் ஜேமிசன் பந்தை கோலி பவுண்டரிக்கு விரட்டினார். 'பவர் பிளே' (முதல் 6 ஓவர்) முடிவில் பெங்களூரு 55/1 ரன் எடுத்தது. 7வது ஓவரை வீசிய சகால் 'சுழலில்' அகர்வால் (24) சிக்கினார். பின் சகால் பந்தை சிக்சருக்கு பறக்க விட்டார் கேப்டன் ரஜத் படிதர். உடனே சுதாரித்த கேப்டன் ஷ்ரேயஸ் துடிப்பாக வியூகம் வகுத்தார். 'வேகப்புயல்' ஜேமிசனை மீண்டும் அழைத்தார். இவரது ஓவரின் (11வது) 3வது பந்தில் சிக்சர் அடித்த படிதர் (26), 5வது பந்தில் எல்.பி.டபிள்யு., ஆனார்.
கோலி உறுதி
ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் அனுபவ கோலி துாணாக நின்று விளையாடினார். இந்த நேரத்தில் ஓமர்சாய் திருப்பம் ஏற்படுத்தினார். இவரது பந்தில் 'புல் ஷாட்' அடிக்க பார்த்தார் கோலி. ஆனால் 'டாப்-எட்ஜ்' ஆகி பந்து மேலே பறக்க, ஓமர்சாய் அற்புதமாக பிடிக்க, கோலி (35 பந்தில் 43 ரன், 3x4, ஸ்டிரைக் ரேட் 122.85) பெவிலியின் திரும்பினார்.
அர்ஷ்தீப் 3 விக்.,
கடைசி கட்டத்தில் 'பினிஷர்' ஜிதேஷ் சர்மா கைகொடுத்தார். அர்ஷ்தீப் ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். ஜேமிசன் ஓவரில்(17வது) ஜிதேஷ் 2 சிக்சர், லிவிங்ஸ்டன் ஒரு சிக்சர் அடித்தனர். 5வது பந்தில் லிவிங்ஸ்டனை (25) அவுட்டாக்கிய போதும் 23 ரன் வழங்கினார். வைஷாக் பந்தில் ஜிதேஷ் (24, 2x4, 2x6) போல்டானார். ஓமர்சாய் ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்த ஷெப்பர்டு நம்பிக்கை தந்தார். கடைசி ஓவரை அர்ஷ்தீப் கலக்கலாக வீசினார். ஷெப்பர்டு (17), குர்ணால் பாண்ட்யா(4), புவனேஸ்வர் (1) என 3 விக்கெட் வீழ்த்தி, 3 ரன் மட்டும் விட்டுக் கொடுத்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 190/9 ரன் எடுத்தது.
பஞ்சாப் சார்பில் அர்ஷ்தீப், ஜேமிசன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
குர்ணால் திருப்பம்
அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு பியான்ஷ் ஆர்யா (24) நிலைக்கவில்லை. 8 ஓவரில் 70/1 ரன் எடுத்து நல்ல நிலையில் இருந்தது. இதற்கு பின் குர்ணால் பாண்ட்யா திருப்பம் ஏற்படுத்தினார். இவரது சுழலில் பிரப்சிம்ரன் (26) சிக்கினார். ஷெப்பர்டு பந்தில் கேப்டன் ஷ்ரேயஸ் (1) நடையைகட்ட, சிக்கல் ஆரம்பமானது. குர்ணால் பந்தில் இங்லிஸ் (39) வீழ்ந்தார். புவனேஷ்வர் ஓவரில்(17), ஓமர்சாய்(1), ஸ்டாய்னிஸ் (6) அவுட்டாக, வெற்றி உறுதியானது. பஞ்சாப் அணி 20 ஓவரில் 184/7 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. 6 ரன்னில் வென்ற பெங்களூரு அணி, முதல் கோப்பையை கைப்பற்றியது.
'சுழலில்' அசத்திய குர்ணால் பாண்ட்யா, புவனேஷ்வர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Advertisement