சத்தீஸ்கரில் முக்கிய நக்சலைட் தலைவன் சுட்டுக் கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பிஜாப்பூர் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் ரூ.50 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட முக்கிய நக்சலைட் தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
நாட்டில் அடுத்த ஆண்டிற்குள் நக்சலைட்கள் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய பாதுகாப்பு படையினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் அந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், பசவராஜ் என்ற முக்கிய நக்சலைட் தலைவன் கொல்லப்பட்டான். ஏராளமானோர் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து வருகின்றனர். முக்கிய தலைவர்கள் இறப்பால் நக்சலைட் அமைப்பு பின்னடைவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், பிஜாப்பூர் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்த மோதலில் அந்த அமைப்பின் முக்கிய தலைவனாக செயல்பட்ட சுதாகர் என்பவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
அவனை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்து இருந்தனர். நர் சிங்காசலம் என்ற சுதாகர் என அறியப்பட்ட இவன், மஹாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் செயல்பட்டு வந்தான். அவனை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வந்தனர். அவனிடம் இருந்து தானியங்கி துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement