கண்டமங்கலத்தில் டிராகன் பழம் சாகுபடி கலெக்டர் ஆய்வு

விழுப்புரம், : கண்டமங்கலம் ஒன்றியம் பக்கிரிபாளையத்தில் விவசாயிகள் டிராகன் பழம் பயிரிட்டுள்ளதை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பக்கிரிபாளையத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு ரூ.38,400 மானியத்தில், விவசாயி ஒரு ஏக்கர் பரப்பளவில் டிராகன் பழம் பயிரிட்டு வளர்த்து வருவதை, கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.62,200 மானியத்துடன் கூடிய ரூ.1,02,000 மதிப்பிலான களை எடுக்கும் கருவி விவசாயிக்கு வழங்கப்பட்டது.

வி.மாத்துாரில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தின் கீழ் ஒரு விவசாயி, 1.4 ஏக்கர் பரப்பளவில் நெல் இயந்திர நடவு மூலம் நெல் ஆடுதுறை 37 ரகம் பயிரிட்டுள்ளதையும், நெல் அறுவடை இயந்திரம் கொண்டு நெல் அறுவடை செய்வதை கலெக்டர் பார்வையிட்டார்.

பக்கிரிபாளையம் ஊராட்சியில், தோட்டக்கலை துறை சார்பில் ரூ.1.50 லட்சம் மானியத்துடன், ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் நிரந்தர பந்தல் அமைத்து, வெண்டை, கோவக்காய், புடலங்காய், வெள்ளரிக்காய் மற்றும் கத்தரிக்காய் பயிர்களையும், அதற்கு பயன்படுத்தும் இயற்கை உரங்கள் மற்றும் பராமரிப்பு, சந்தைப்படுத்துதல் குறித்து விவசாயிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, வேளாண் இணை இயக்குநர் ஈஸ்வர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அன்பழகன், தோட்டக்கலை அலுவலர் பிறைசூடன், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் நீலகண்டன், உதவி பொறியாளர் குகன் உள்ளிட்ட அலுவலர்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.

Advertisement