ரயில் மேம்பாலத்திற்கு அனுமதி கேட்டு ஆறு ஆண்டுகளாக காத்திருப்பு காலை, மாலையில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கரியன்கேட் பகுதியில், ரயில்வே மேம்பாலம் அமைக்க இருமுறை, மண் மாதிரி சேகரிக்கும் பணி செய்தும், ரயில்வே துறை அனுமதி அளிக்காததால், மேம்பாலம் கட்டும் திட்டம் எட்டாக்கனியாக உள்ளது. இதனால், காஞ்சிபுரம் - அரக்கோணம் மற்றும் காஞ்சிபுரம் - சென்னை வழித்தடங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது.

காஞ்சிபுரம் - அரக்கோணம் செல்லும் சாலையில், கரியன்கேட் ரயில்வே கடவுப்பாதை உள்ளது. இந்த ரயில் கடவுப்பாதை வழியாக, காஞ்சிபுரத்தில் இருந்து, அரக்கோணம், திருத்தணி, திருப்பதி ஆகிய மார்க்கம் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, சென்னை கோயம்பேடு ஆகிய பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதேபோல, மும்பை, திருப்பதி, ரேணிகுண்டா, புத்துார், திருத்தணி, அரக்கோணம், வெள்ளைகேட் வழியாக காஞ்சிபுரத்திற்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர்.

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் ரயில் வழித்தடத்தில், காலை மற்றும் மாலை நேரங்களில், அடுத்தடுத்து மின்சார ரயில்கள் வெவ்வேறு மார்க்கமாக இயக்கப்படுவதால், கரியன்கேட் ரயில்வே கடவுப்பாதையில், நீண்டதுாரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்த பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

கடந்த, 2018ம் ஆண்டு ஜூன் மாதம் கரியன்கேட் பகுதியில், மேம்பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு, அதே ஆண்டு செப்டம்பரில் மேம்பாலம் கட்டுவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

கரியன்கேட்டில் ரயில்வே மேம்பாலம் கட்ட மண்மாதிரி, வரைபடம் தயாரித்து, 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் ரயில்வே துறையின் அனுமதிக்காக, நெடுஞ்சாலைத் துறையினர் அனுப்பிவைத்தனர்.

ஆறாண்டாகியும், இதுவரை அனுமதி கொடுக்காமல், ரயில்வே துறை அலட்சியமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், காஞ்சிபுரத்தில் இருந்து, அரக்கோணம், திருத்தணி வழியாக திருப்பதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து வெள்ளைகேட் வழியாக சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.

ஒரு சில நேரங்களில் கடவுப்பாதை கேட் பழுது ஏற்பட்டால் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளது.

நேற்று, கரியன்கேட் பகுதியில், மேம்பாலம் அமைக்கும் பணிக்கு மண் மாதிரி சேகரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டாவது மேம்பாலம் கிடைக்குமா என, வாகன ஓட்டிகள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

எனவே கரியன்கேட் பகுதியில் கட்டப்பட வேண்டிய மேம்பாலத்திற்கான அனுமதியை ரயில்வே துறையிடம் விரைந்து அனுமதி பெற்று, மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கரியன்கேட் ரயில் கடவுப்பாதையில் மேம்பாலம் அமைக்க மீண்டும் அனுமதி கேட்டு பரிந்துரை செய்துள்ளோம்.

ரயில்வே துறையின் அனுமதி பெற்ற பிறகே, மேம்பாலம் கட்ட ஆகும் செலவு குறித்து, அரசுக்கு எங்கள் துறை சார்பாக கருத்துரு அனுப்புவோம்.

அதன் பிறகே மேம்பாலத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து, 'டெண்டர்' விட்டு மேம்பாலப் பணிகள் துவங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement