பராகுவே போகிறது வந்தே பாரத் ரயில்




தென் அமெரிக்க நாடான பராகுவேவின் அதிபர் சாண்டியாகோ பெனா, நம் நாட்டின் வந்தே பாரத் ரயில்களை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

வந்தே பாரத் ரயில் சேவை திட்டம் நம் நாட்டில், 2019ல் துவங்கப்பட்டது. முதல் ரயில் டில்லி - வாரணாசி இடையே இயக்கப்பட்டது.


பயண நேரம் வெகுவாக குறைந்ததால் இந்த ரயிலுக்கு பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.



இதையடுத்து படிப்படியாக தற்போது நாடு முழுதும் 51 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.


இதன் பெட்டிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்., எனப்படும் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.


இதில் மேம்பட்ட பிரேக் அமைப்பு, தானியங்கி கதவுகள், ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்துடன் கூடிய பயணியர் தகவல் அமைப்பு, வைபை இணைய இணைப்பு, வசதியான இருக்கைகள் உள்ளன. உயர் வகுப்பு பெட்டிகளில் சுழலும் இருக்கை, அகன்ற ஜன்னல்கள் உண்டு. அதிகபட்சமாக மணிக்கு, 160 கி.மீ., வேகத்தில் இயக்க முடியும்.


இந்நிலையில், டில்லி வந்துள்ள பராகுவே அதிபர் சாண்டியாகோ பெனாவை, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று சந்தித்தார்.


இந்திய ரயில்வேயில் உள்ள வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து அந்நாட்டு அதிபரிடம் அஸ்வினி வைஷ்ணவ் விவாதித்தார். அவரிடம் வந்தே பாரத் ரயில்களை வாங்குவதற்கு ஆர்வமுடன் இருப்பதாக பராகுவே அதிபர் தெரிவித்தார்.மேலும், பராகுவேயின் அட்லான்டிக் மற்றும் பசுபிக் கடல்களை இணைக்கும் ரயில் திட்டத்தில் இந்திய ரயில்வே பங்கு பெற அழைப்பு விடுத்தார்.



- நமது நிருபர் -

Advertisement