அரசு பள்ளிகளில் இலவச புத்தகம் விநியோகம்

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, 72 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நேற்று முன்தினம் பள்ளிகள் திறப்பு முதல் நாளில், மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை நிறைவடைந்து, பள்ளிகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பூ, இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு முதல் நாளிலேயே புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்கப்பட்டன. அதனுடன் காலணிகள், கால் உறைகள், வண்ண பென்சில்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ், புவியியல் வரைபடங்கள் வழங்கப்பட்டன.
பள்ளி மாணவர்களுக்கு புதிய பேருந்து பயண அட்டை வழங்கப்படும் வரை, அவர்கள் தங்களின் பழைய பயண அட்டை மற்றும் பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி, அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெட்டதாபுரம் நடுநிலைபள்ளியில், பள்ளி திறந்த முதல் நாளில், முதல் வகுப்பில், 13 மாணவ, மாணவியரும், இரண்டாம் வகுப்பில் இரண்டு பேரும், மூன்றாம் வகுப்பில் இருவரும், நான்காம் வகுப்பில் ஒரு மாணவரும், ஐந்தாம் வகுப்பில் இரண்டு மாணவ, மாணவியரும் சேர்ந்தனர்.
பள்ளிக்கு முதல் நாளில் வருகை தந்த அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவச புத்தகம், நோட்டுகள் வழங்கப்பட்டன. வட்டார கல்வி அலுவலர் ராஜம்மாள் பங்கேற்று, அரசு பள்ளிகளில் கூடுதல் மாணவர்களை சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் மதியழகன், பட்டதாரி ஆசிரியர்கள் திருநாவுக்கரசு, ஆனந்தகுமார், இடைநிலை ஆசிரியர்கள் கீதா, நந்தினி, குமரேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
கிராம உதவியாளர் பணி நியமனம் வழிமுறைகளை வெளியிட்டது அரசு
-
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
-
மீன் பிடி ஏல குத்தகைக்கு விண்ணப்பம் வரவேற்பு
-
கணபதி, முருகன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
-
மருத்துவமனையில் பிரின்டர் பழுது ஓ.பி., சீட்டு வழங்குவதில் தாமதம்
-
சேதமடைந்த கட்டடத்தில் இயங்கும் வாலாஜாபாத் நுாலகத்தால் வாசகர்கள் அவதி