கிராம உதவியாளர் பணி நியமனம் வழிமுறைகளை வெளியிட்டது அரசு

சிவகங்கை:தமிழக அளவில் வருவாய் துறையில் காலியாக உள்ள 2500 கிராம உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப, தேவையான வழிமுறைகளை வருவாய்துறை வகுத்துள்ளது.

மாநில அளவில் வருவாய்துறையில் வி.ஏ.ஓ.,க்களின் கீழ் பணிபுரியும் கிராம உதவியாளர்கள் காலிப்பணியிடம் 2500 ஆக அதிகரித்துள்ளது. முன்பு மாவட்ட கலெக்டர், கோட்டாட்சியர் மூலம் கிராம உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. இதனை தவிர்த்து மாநில அளவில் ஒரே மாதிரியான விதிமுறைகளை பின்பற்ற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.

மாவட்ட கலெக்டர், கோட்டாட்சியர், தாசில்தார்கள் அடங்கிய குழுவினர் கிராம உதவியாளர் தேர்வில் தமிழை பாடமாக கொண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் 10 மதிப்பெண், சைக்கிள் மற்றும் டூவீலர் (லைசென்ஸ் உடன்) ஓட்டினால் 10 மதிப்பெண், தமிழ் வாசிப்பு திறன் தேர்வு, எழுதும் திறனுக்கென 30 மதிப்பெண், அந்தந்த கிராமம், தாலுகா அளவில் வசிப்பவராக இருந்தால் 35 மதிப்பெண் என கிராம உதவியாளர் தேர்வுக்கு 85 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.

கோட்டாட்சியர், தாசில்தார், தனி தாசில்தார்கள் மூலம் நேர்முக தேர்வு நடத்தப்பட்டு அதற்கு 15 மதிப்பெண் வரை வழங்க வேண்டும். கிராம உதவியாளர் தேர்வு பட்டியலை கலெக்டரின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என கூடுதல் தலைமை செயலாளர் அமுதா உத்தரவில் தெரிவித்துள்ளார்.

முறைகேட்டிற்கு இடமில்லை



தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாநில துணை தலைவர் தமிழரசன் கூறும்போது, இதன் மூலம் முறைகேடு, புகாருக்கு இடமிருக்காது, என்றார்.

Advertisement