ரூ.2000 கோடி பள்ளி கட்டுமான பணி ஊழல்: ஆம் ஆத்மி முக்கிய தலைவர்களுக்கு சம்மன்

புதுடில்லி:அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவதில் ரூ. 2000 கோடி ஊழல் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் டில்லி மாஜி அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோருக்கு ஊழல் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது.
ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின். இவர்கள் மீது அரசு பள்ளிகளுக்கு வகுப்பறை கட்டியது தொடர்பாக ரூ.2000 கோடி ஊழல் நடந்ததாக ஏப்ரல் 30ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுமான பணிகள் அளிக்கப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களில் பெரும்பான்மையானவை ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்பு உடையவை என்பதில் இந்த குற்றச்சாட்டு அதிக கவனம் பெற்றுள்ளது.
இந் நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஜூன் 6ம் தேதி சத்யேந்தர் ஜெயின் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல, ஜூன் 9ம் தேதி மணீஷ் சிசோடியா ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்மன் குறித்து ஆம் ஆத்மி தரப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;
பா.ஜ.,வால் வேண்டுமென்று நிகழ்த்தப்பட்ட அரசியல் உத்தி. ஆம் ஆத்மி தலைவர்களை குறி வைத்து ஊழல் வழக்கு தொடுக்கின்றனர். ஊழல் தடுப்புப் பிரிவு தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.



