காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ., ரெய்டு; துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்

1

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நடத்திய சோதனையில், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.


பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளை வேரறுக்கும் நடவடிக்கையாக,

காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுமார் 32 இடங்களில் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர சோதனை நடத்தியது.


லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் நபர்களின் வீடு உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டது.


இந்த சோதனையில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து என்.ஐ.ஏ., கூறியதாவது; ஜம்மு காஷ்மீரில் அமைதியை கெடுக்கவும், மத நல்லிணக்கத்தை நிலைகுலைய செய்யும் விதமாக, பயங்கரவாத செயல்களை செய்யவும், கலவரத்தை தூண்டவும், டி.ஆர்.எப்., எம்.ஜி.எச்., ஜே.கே.எப்.எப்., உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருகிறது.


பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்கள், ஆன்லைன் ஆப்கள் மூலமாக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றனர். ஆயுதங்கள், வெடிகுண்டுகள் உள்பட பயங்கர வெடிபொருட்களை டிரோன்களைப் பயன்படுத்தி விநியோகித்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இந்த சோதனையில், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், டிஜிட்டல் உபகரணங்களும், ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement