குருத்வாரா இருக்கும் இடத்திற்கு உரிமை கோரிய வக்ப் வாரியம்: தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

10

புதுடில்லி: டில்லியில் குருத்வாரா அமைந்துஉள்ள இடம் ஒன்று, வக்ப் சொத்து என உரிமை கோரி டில்லி வக்ப் வாரியம் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. அங்கு ஏற்கனவே குருத்வாரா செயல்படுகிறது. அது அப்படியே இருக்கட்டும் எனக்கூறியுள்ளது.


டில்லியின் கிழக்குப்பகுதியில் உள்ள ஷாதாரா என்ற இடத்தில் குருத்வாரா ஒன்று செயல்பட்டு வருகிறது. அது அமைந்துள்ள இடம், வக்ப் இடம் எனக்கூறி, டில்லி வக்ப் வாரியம் கடந்த 2010ம் ஆண்டு டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. ஆனால், அந்த நிலம் வக்ப் சொத்து என நிரூபிக்க தவறி விட்டதாக தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.


இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டில்லி வக்ப் வாரியம் மேல்முறையீடு செய்தது.


மனுவில், ' அந்த இடத்தில், மஸ்ஜித் தாகியாபாபர் ஷா என்ற மசூதி இருந்தது. பழங்காலத்தில் இருந்தே அங்கு மசூதி செயல்பட்டு வந்தது,' எனக்கூறப்பட்டு இருந்தது.


ஆனால், பிரதிவாதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், '' அந்த இடம் வக்ப் சொத்து கிடையாது. அதன் உரிமையாளரான முகமது ஆஷான் விற்று விட்டார்'' எனக்கூறினார்.



இதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட், பிறப்பித்த உத்தரவில், '' அந்த இடத்தில் 1947 முதல் குருத்வாரா செயல்பட்டு வருகிறது. வக்ப் சொத்து என்பதற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை. அங்கு குருத்வாரா இருப்பது இருக்கட்டும். அங்கு வழிபாட்டு கட்டமைப்பு ஏற்கனவே அங்கு செயல்பட்டு வருகிறது. உங்கள் கோரிக்கையை நீங்களே விட்டுக் கொடுக்க வேண்டும்'' என அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement