சாதிப்பாரா நீரஜ் சோப்ரா: 'கிளாசிக்' ஈட்டி எறிதலில்

பெங்களூரு: 'கிளாசிக்' ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூருவில், 'நீரஜ் சோப்ரா கிளாசிக்' சர்வதேச ஈட்டி எறிதல் போட்டி கடந்த மே 24ல் நடக்க இருந்தது. இந்தியா, -பாகிஸ்தான் போர் பதட்டம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இப்போட்டி, பெங்களூருவில் இன்று நடக்கிறது. முதன்முறையாக நடத்தப்படும் இப்போட்டியில், 7 சர்வதேச வீரர்கள், 5 இந்தியர் என மொத்தம் 12 பேர் பங்கேற்கின்றனர்.
இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ், கிஷோர் ஜெனா, ரோகித் யாதவ், சாஹில் சில்வால் களமிறங்குகின்றனர். இரண்டு முறை உலக சாம்பியன் கிரானடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (சிறந்த செயல்பாடு: 93.07 மீ.,), ரியோ ஒலிம்பிக்கில் (2016) தங்கம் வென்ற ஜெர்மனியின் தாமஸ் ரோஹ்லர் (93.90 மீ.,), 2015ல் உலச சாம்பியன் பட்டம் வென்ற கென்யாவின் ஜூலியஸ் யேகோ (92.72 மீ.,), அமெரிக்காவின் கர்டிஸ் தாம்ப்சன் (87.76 மீ.,), ஆசிய விளையாட்டில் வெண்கலம் கைப்பற்றிய ஜப்பானின் ஜென்கி டீன் (84.28 மீ.,), இலங்கையின் ருமேஷ் பதிராகே (85.45 மீ.,), பிரேசிலின் லுாயிஸ் மவுரிசியோ டா சில்வா (86.34 மீ.,) பங்கேற்கின்றனர்.


ஒலிம்பிக் (2020ல் தங்கம், 2024ல் வெள்ளி), உலக சாம்பியன்ஷிப் (2023ல் தங்கம், 2022ல் வெள்ளி) போட்டிகளில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, சமீபத்தில் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த டைமண்ட் லீக் போட்டியில் முதன்முறையாக 90.23 மீ., எறிந்தார். தனது சொந்த தேசிய சாதனையை முறிடித்த இவர், ஈட்டி எறிதல் வரலாற்றில் 90 மீ., துாரத்திற்கு மேல் எறிந்த முதல் இந்தியர், 3வது ஆசிய வீரர், 25வது சர்வதேச வீரர் ஆனார். இன்று சொந்த மண்ணில் அசத்தினால் மீண்டும் 90 மீ., துாரத்திற்கு மேல் எறியலாம்.

Advertisement