பெங்களூரு ரசிகர்களுக்காக கோப்பை... * பாராட்டு விழாவில் கோலி நெகிழ்ச்சி

1

பெங்களூரு: ''பிரிமியர் தொடரில் கிடைத்த கோப்பை, என்னைப் போல் தனி ஒருவருக்காக அல்ல, 18 ஆண்டுகளாக அணியை நேசித்த பெங்களூரு ரசிகர்களுக்கானது,'' என்றார் கோலி.
இந்தியாவில் 18வது பிரிமியர் கிரிக்கெட் தொடர் நடந்தது. ஆமதாபாத்தில் நடந்த பைனலில் பெங்களூரு அணி (190/9), 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பை (184/7) வீழ்த்தியது. பிரிமியர் தொடரின் 18 ஆண்டு வரலாற்றில் முதன் முறையாக பெங்களூரு சாம்பியன் ஆனது. நேற்று பெங்களூரு திரும்பிய கோலி, கேப்டன் ரஜத் படிதர் உள்ளிட்ட வீரர்களை, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், விமானநிலையம் சென்று வரவேற்றார்.
பின் தாஜ் ஓட்டலில் வீரர்கள் தங்கினர். அங்கிருந்து பெங்களூரு அணி வீரர்கள், சட்டமன்றத்திற்கு (விதான் சவுதா) மாலை 5:00 மணிக்கு வந்தடைந்தனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்டோர், கோலி உள்ளிட்டோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
அனுமதி மறுப்பு
பின் 2.5 கி.மீ., துாரத்தில் உள்ள சின்னசாமி மைதானம் வரை, திறந்தவெளி பஸ்சில் ஊர்வலமாக செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கான சிறப்பு பேருந்து தயாரானது. ஆனால், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், வெற்றி பவனிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து மாலை 5:45 மணிக்கு மைதானத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. மைதானத்தில் ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர். அப்போது கோலி பேசத் துவங்கினார். ஆனால் ரசிகர்கள் தொடர்ந்து உற்சாக குரல் எழுப்ப, பேச முடியாமல் தவித்தார். பின் கோலி பேசியது:
உங்களிடம் பேசுவதற்கு அதிக நேரமில்லை. ஏனெனில் பிரிமியர் கோப்பையை முதலில் உங்களிடம் காட்டவேண்டும். எங்களது கேப்டன் ரஜத் படிதர் கூறியது போல, இனிமேல் 'ஈ சாலா கப் நம்தே' அல்ல, 'ஈ சாலா கப் நம்து' (இந்த கோப்பை நமக்கு சொந்தமானது). இதை வெற்றிகரமாக செய்து முடித்து விட்டோம். இது அணியின் வீரர்களுக்காக அல்லது என்னைப் போல 18 ஆண்டுகளாக அணியில் இருக்கும் ஒருவருக்காக அல்ல, இந்த வெற்றி அனைத்தும் உங்களுக்கானது. இந்த அழகான பெங்களூரு நகரத்தின் மக்களுக்கானது. கடந்த 18 ஆண்டுகளாக பெங்களூரு அணியை நேசித்த ரசிகர்களுக்கானது. ஏனெனில் உலகின் எந்த ஒரு அணிக்கும் இதுபோல ரசிகர்கள் ஆதரவு இருந்து நான் பார்த்தது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

கேப்டன் ரஜத் படிதர் கூறுகையில்,''18வது சீசன் துவங்கியது முதல், நாங்கள் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என அனைவருக்கும் தெளிவான திட்டமிடல் இருந்தது. இந்த வெற்றி, ஒரு சிறப்பான தருணமாக எங்களுக்கு அமைந்தது. பிரிமியர் கிரிக்கெட் தொடரில் கிடைத்த கோப்பை உங்களுக்கானது,'' என்றார்.

வார்த்தைகள் இல்லை...
சின்னசாமி மைதானத்திற்கு வெளியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியாகினர். இதுகுறித்து கோலி வெளியிட்ட செய்தியில்,' சோகத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. முற்றிலும் மனம் உடைந்து விட்டது,' என தெரிவித்துள்ளார்.

சபாஷ் சாய் சுதர்சன்
பிரிமியர் தொடரில் குஜராத் அணிக்காக தமிழகத்தின் சாய் சுதர்சன் துவக்க வீரராக களமிறங்கினார். 15 போட்டியில் 759 ரன் குவித்தார். அதிக ரன் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். இவருக்கு 'ஆரஞ்சு' நிற தொப்பி வழங்கப்பட்டது. தவிர சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான விருது, அதிக பவுண்டரிகள் (88) அடித்த வீரர் உட்பட பல விருதுகளை தட்டிச் சென்றார். பரிசுத் தொகையாக மொத்தம் ரூ. 40 லட்சம் சுதர்சனுக்கு கிடைத்தது.

பி.சி.சி.ஐ., வருத்தம்
கோலி உள்ளிட்ட பெங்களூரு வீரர்களை காண, ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே திரண்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்ட பலர் பலியாகினர். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு செயலர் தேவஜித் சைகியா கூறுகையில்,'' மக்கள் கிரிக்கெட் வீரர்களை பார்க்க ஆர்வமாக குவிந்தனர். நிர்வாகிகள் இன்னும் சிறப்பாக திட்டமிட்டு இருக்கலாம். இதுபோன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் போது, சரியான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஏதோ ஒருசில இடத்தில் தவறு நடந்துள்ளது. இது துரதிருஷ்டவசமானது. இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் மீண்டு வர பிரார்த்திக்கிறேன்,'' என்றார்.

Advertisement