கார் கவிழ்ந்து தீப்பிடித்து விபத்து

சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் குமார், 53; மின்வாரியஊழியர். இவர், விடுமுறைக்காக சென்னைக்கு வந்திருந்த தன் மகள் குடும்பத்தினரை, காரைக்கால் அருகே அம்பகரத்துாரில் உள்ள அவர்கள் வீட்டில்விட, குடும்பத்துடன் நேற்று காரில் சென்றார்.

காரில் அவரது மனைவி வேதவல்லி, 52, மருமகன் காளிதாஸ், 35, மகள் லலிதா, 33, மகன் திவாகர், 32, பேரன்கள் விஷ்வா, மாதேஸ் ஆகியோர் இருந்தனர். காரை மகன் திவாகர் ஓட்டினார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே எருக்கூர் என்ற இடத்தில் வந்தபோது, எதிர்பாராத விதமாக கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது, டீசல் டேங்க் உடைந்து தீப்பிடித்து எரிந்தது.

இதில், திவாகர் மற்றும்லலிதா இருவரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர்.

இச்சம்பவம் குறித்து, ஆணைக்காரன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement