பட்டேல் சாலை 70 அடி அகலமாக விரிவாக்கம் 'யு - டர்ன்' அமைத்து நெரிசல் குறைக்கவும் முடிவு

சென்னை, சென்னையின் மைய பகுதியில் உள்ள முக்கிய சாலைகளின் ஒன்றான சர்தார் பட்டேல் சாலை, 50 அடி அகலம் கொண்டது.
இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., அடையாறு பகுதியில் இருந்து, கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் சைதாப்பேட்டையில் இருந்து அடையாறு, ஓ.எம்.ஆர்., கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள், சர்தார் பட்டேல் சாலை வழியாக செல்கின்றன.
இதில், கவர்னர் மாளிகை நுழைவு வாயிலில் இருந்து, மத்திய கைலாஷ் நோக்கி செல்லும் இந்த சாலையில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதுவும், மேம்பாலத்தை ஒட்டி உள்ள கோட்டூர்புரம் நோக்கி செல்லும் அணுகு சாலை, ஒரு பேருந்து மட்டுமே செல்லும் வகையில் குறுகலாக உள்ளது.
அங்கு சிகப்பு சிக்னல் போடும்போது, அண்ணா பல்கலை வாசல் வரை நெரிசல் நீடிக்கிறது. அண்ணா பல்கலை நுழைவு வாயில் சாலையில் சிகப்பு சிக்னல் போடும்போது, வாகன நெரிசல் சின்னமலை வரை நீடிக்கிறது.
இதனால், சைதாப்பேட்டை நீதிமன்றம் உள்ள தாலுகா சாலையில் நெரிசல் ஏற்படுவதால், வேளச்சேரி, கிண்டி நோக்கி செல்லும் வாகனங்களும் சிக்கிக் கொள்கின்றன.
கவர்னர் மாளிகை நுழைவு வாயிலில் இருந்து மத்திய கைலாஷ் வரை, மாநில அரசின் கீழ் உள்ள நெடுஞ்சாலைத்துறை, கல்வித்துறை, அண்ணா பல்கலை மற்றும் மத்திய அரசின் கீழ் உள்ள சி.எல்.ஐ.ஆர்., ஆகிய அரசு நிறுவனங்கள் உள்ளன.
நில ஆர்ஜிதம் செய்ய வேண்டிய இடங்கள் குறைவாக உள்ளதால், சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, நம் நாளிதழில் பல காலகட்டங்களில் செய்தி வெளிவந்துள்ளது.
இந்நிலையில், சாலையை விரிவாக்கம் செய்ய, நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது. இதன்படி, ஐ.ஐ.டி., நுழைவு வாயிலில் இருந்து, கிண்டி செல்லம்மாள் கல்லுாரி சிக்னல் வரை, 3.5 கி.மீ., துாரம் வரை, 70 அடி சாலையாக அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சி.எம்.டி.ஏ., சாலை விரிவாக்கத்திற்காக, திட்ட அறிக்கை தந்துள்ளது. இந்த சாலையில், 10க்கும் குறைவான பகுதிகளில் நில ஆர்ஜிதம் செய்ய வேண்டி உள்ளது. மீதமுள்ள இடங்கள், அரசுக்கு சொந்தமானதாக உள்ளதால், அதில் எளிதாக விரிவாக்கம் செய்ய முடியும்.
இதற்கான பணிகள், ஓரிரு மாதங்களில் துவக்கும் என எதிர்பார்க்கிறோம். விரிவாக்கம் செய்தால், சர்தார் பட்டேல் சாலையில் நெரிசல் கணிசமாக குறையும்.
அதற்கு முன், கோட்டூர்புரத்தில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள், கேன்சர் மருத்துவமனை சிக்னலில் இருந்து இடதுபக்கம் திரும்பி, 'யு - டர்ன்' செய்து செல்லும் வகையில், போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனால், சிக்னல் பயன்பாடு நிறுத்தப்பட்டு, அந்தந்த திசையின் வாகனங்கள் தானாக செல்வதால், நெரிசல் ஏற்பட வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்
-
ராஜ்யசபா தேர்தல்; முதல்வர் முன்னிலையில் கமல், தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
-
நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு; பிரதமர் மோடி பெருமிதம்
-
பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார்; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
மக்களே, உஷாரா இருங்க; நாடு முழுவதும் 5,364 பேருக்கு கொரோனா பாதிப்பு