சிவகாசியில் பருத்தி, வாழை மரங்களை வேட்டையாடும் காட்டுப் பன்றிகள்

சிவகாசி: சிவகாசி பகுதியில் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள பருத்தியையும், வாழை மரங்களையும் காட்டுப் பன்றிகள் அழித்து வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி பகுதியில் சித்தமநாயக்கன்பட்டி, செவலுார், குமிலங்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுக்கிரவார்பட்டி, நமஸ்கரித்தான் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் பருத்தி பயிரிட்டுள்ளனர். தற்போது பருத்திச் செடியில் காய் விட்டு பருவத்திற்கு வந்துள்ளது. இன்னும் சில வாரங்களில் அறுவடை செய்ய உள்ள நிலையில் இப்பகுதிகளில் காட்டுப்பன்றிகள் உணவிற்காக பருத்திச் செடியை வேரோடு பிடுங்கி அழித்து வருகிறது.

ஒரு ஏக்கருக்கு விவசாயிகள் ரூ. 30 ஆயிரம் வரை செலவழித்த நிலையில் காட்டுப் பன்றிகள் செடிகளை அழிப்பதால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கவலையில் உள்ளனர். தவிர சுக்கிரவார்பட்டி பகுதியில் பருத்தியை அழிப்பதோடு மட்டுமல்லாமல் வாழை மரங்களையும் காட்டுப் பன்றிகள் விட்டு வைக்கவில்லை. வாழை மரங்களையும் உணவிற்காக அழித்து வருகின்றது. காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பயிர்களை அழிக்கும் இவைகளை என்ன செய்வதென்று தெரியாமல் விவசாயிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

விவசாயிகள் கூறுகையில், சில மாதங்களுக்கு முன்பு மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசமாக்கியதால் பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்தோம். தற்போது பருத்தி, வாழை மரங்களை காட்டு பன்றிகள் அழித்து வருகிறது. இவைகளை வேட்டையாடுவதற்கு சட்டம் இடம் கொடுக்கவில்லை. இதனால் இந்த இழப்பினை எப்படி சரி செய்வது என்றும் தெரியவில்லை. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement