குடிநீர் வால்வு சேதப்படுத்தினால் புகார் அளிக்க தொலைபேசி எண்

மேட்டுப்பாளையம்; காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சிகளில் குடிநீர் குழாய்கள் மற்றும் குடிநீர் வால்வூகளை சேதப்படுத்துபவர்கள் விவரங்களை தெரிவிக்க தொலைப்பேசி எண் வெளியிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சில ஊராட்சிகளில் குடிநீர் குழாய்கள் மற்றும் குடிநீர் வால்வுகள் தனி நபர்களால் சேதப்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதன் காரணமாக சீரான குடிநீர் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. கிராம ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை தொட்டிகள், தரைமட்ட தொட்டிகள், குடிநீர் குழாய்கள் மற்றும் குடிநீர் வால்வுகள் உள்ளிட்ட ஊராட்சி சொத்துக்களை சேதப்படுத்தினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போலீஸ் வாயிலாக குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் அண்மையில் எச்சரித்து இருந்தார்.

இதையடுத்து காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சிகளில் குடிநீர் குழாய்கள் மற்றும் குடிநீர் வால்வுகளை சேதப்படுத்துபவர்கள் விபரத்தினை பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் அல்லது ஒன்றிய அலுவலகத்தில் தெரிவிக்க ஏதுவாக தற்போது தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது.

காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு 9786896660 என்ற எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என ஒன்றிய அலுவலர்கள் தெரிவித்தனர்.-

Advertisement