பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்

நாக்பூர்:"பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் விரும்பினர். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டது, இந்தியாவின் நடவடிக்கை தொடர வேண்டும்," என்று ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தினார்.

நாடு முழுவதிலுமிருந்து 840 தன்னார்வலர்கள் பங்கேற்ற 25 நாள் பயிற்சி முகாம், விகாஸ் வர்க் த்விதியா, மே 12 அன்று நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் பகுதியில் அமைந்துள்ள டாக்டர் ஹெட்கேவர் ஸ்மிருதி மந்திரில் தொடங்கியது. அதன் தன்னார்வ பயிற்சி முகாமின் நிறைவு விழா நாக்பூரில் இன்று நடைபெற்றது. நிறைவு விழாவில் பழங்குடியினத் தலைவர் அரவிந்த் நேதம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

நிறைவு விழாவில் மோகன் பகவத் பேசியதாவது:

கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மக்கள் சோகமாகவும் கோபமாகவும் இருந்தனர். மேலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று விரும்பினர். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.
பஹல்காம் சம்பவத்திற்கு பிறகு, அரசியல் வர்க்கத்தினர் காட்டிய பரஸ்பர புரிதலும், பின்னர் இந்தியா எடுத்த நடவடிக்கையும் தொடர வேண்டும். நிரந்தர அம்சமாக மாற வேண்டும்.


நமது பாதுகாப்பு விஷயங்களில் இந்தியா சுயசார்புடையதாக இருக்க வேண்டும்.

இந்தியாவுடன் நேரடிப் போரில் வெற்றி பெற முடியாதவர்கள், மறைமுகப் போரை நடத்தி நம்மை ரத்தம் சிந்த வைக்கிறார்கள். அவர்களது நோக்கத்தை நமது ராணுவம் முறியடித்துவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement