சர்வதேச சந்தையில் வலிமை பெறலாம்; ரெப்போ ரேட் குறைப்புக்கு வரவேற்பு

திருப்பூர்; 'ரெப்போ ரேட் குறைக்கப்பட்டதால், சர்வதேச சந்தை போட்டியை சமாளிக்கும் அளவுக்கு, ஏற்றுமதியாளர்கள் வலிமை பெறுவர்' என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத்தலைவர் சக்திவேல் கூறியுள்ளார்.

மத்திய ரிசர்வ் வங்கி, 6 சதவீதமாக இருந்த 'ரெப்போ ரேட்' 5.50 சதவீதமாக குறைத்துள்ளது.

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத்தலைவர் சக்திவேல் கூறியதாவது:வட்டி குறைப்பு நடவடிக்கை இருந்தாலும், 2025-26ம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.,) 6.5 சதவீதம் என்ற நிலையில் மாறாமல் இருப்பது, நம் நாட்டின் பொருளாதார உறுதி மற்றும் வளர்ச்சிப்பாதையின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

'ரெப்போ ரேட்' குறைப்பால், அனைத்து வெளிப்புற அடிப்படை கடனளிப்பு விகிதம் குறையும். கடந்த ஏப்., மாதம் 'ரெப்போ ரேட்' குறைக்கப்பட்ட போது, வங்கிகள் உடனடியாக தங்கள் கடன் விகிதத்தை குறைத்தன; வட்டி குறைப்பு அறிவிப்பால், தொழில்துறையினர் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும்.

சில்லரை கடன் மீதான வட்டி குறையும். மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க செய்யும். தொழிற்கடன், வாகன கடன், வீட்டுக்கடன் என, பல்வகை கடன்களுக்கான வட்டியும் குறையும். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சரியான ஆதாரமாக அமையும்; நீடித்த வளர்ச்சிக்கு துணை நிற்கும். மத்திய அரசு மற்றும் மத்திய ரிசர்வ் வங்கியின் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய நடவடிக்கையால், சர்வதேச சந்தைகளில் போட்டியை சமாளிக்கும் வகையில் ஏற்றுமதியாளர்கள் வலிமை பெறுவர்.

இவ்வாறு, சக்திவேல் கூறினார்.

Advertisement