மாலை நேர கல்வி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வினியோகம்

பந்தலுார்; பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், நீலகிரி சேவா கேந்திரம் சார்பில், மாலை நேர கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

தன்னார்வ ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்படும் நிலையில், 500 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

எருமாடு சிவன் கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கேந்திர பொறுப்பாளர் விஜேஸ் வரவேற்றார்.

பொறுப்பாளர் சுரேஷ் தலைமை வகித்து பேசுகையில், ''வெறும் ஏட்டுக்கல்வி தவிர, இறை வழிபாடு, தேசபக்தி, மூத்தவர்களை மதித்தல், சுத்தம் மற்றும் சுகாதாரம், சுய ஒழுக்கம், தனித்திறன்கள் போன்றவற்றையும் கற்பிக்கப்படுகின்றன.

தற்போது, 500 மாணவர்களுக்கு சேவா இன்டர்நேஷனல் குவைத் உதவியுடன், புத்தகப் பை, புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கப்படுகிறது. இது மாணவர்களுக்கு ஒரு உந்து சக்தியாக அமையும்,''என்றார். மாவட்ட சமூக நல பணியாளர் குமார், ' அரசு துறை சார்ந்து வழங்கப்படும் திட்டங்கள், பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்,' குறித்து விளக்கம் அளித்தார்.

வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், சமூக ஆர்வலர் காளிமுத்து ஆகியோர், மாணவர்களுக்கு கல்வி தளவாட பொருட்களை வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

இதில், கேந்திர பொறுப்பாளர் விஜயகுமார், கோவில் கமிட்டி நிர்வாகிகள் உன்னிகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். தாமோதரன் நன்றி கூறினார்.

Advertisement