கொண்டாட்டத்தை விட உயிர் முக்கியம்: கபில் தேவ் காட்டம்

2

பெங்களூரு: ''நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பலியானது கவலை அளிக்கிறது. வெற்றி கொண்டாட்டத்தைவிட மனித உயிர்கள் முக்கியம்,''என கபில் தேவ் தெரிவித்தார்.


ஆமதாபாத்தில் நடந்த 18வது பிரிமியர் கிரிக்கெட் தொடரின் பைனலில் பெங்களூரு அணி, பஞ்சாப்பை வீழ்த்தி, முதல் முறையாக கோப்பை வென்றது. பெங்களூரு அணியின் 18 ஆண்டு கனவு நனவானதால், கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இதில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இது குறித்து இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் கூறியது:


கபில் தேவ்: ரசிகர்கள் பலியானது கவலை அளிக்கிறது. இதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். மக்களும் தவறு செய்கின்றனர். அடுத்த முறை இது போன்ற வெற்றி பேரணி நடந்தால், மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரிய அளவிலான பாராட்டு விழா நடத்தும் போது, இத்தகைய தவறுகள் நடக்க கூடாது. ஒரு பக்கம் கொண்டாட்டம், மறுபக்கம் மனித உயிர் இழப்பை ஏற்க முடியாது. எதிர்காலத்தில் ஏதாவது ஒரு அணி கோப்பை வென்றால் அமைதியாக இருக்க வேண்டும். கொண்டாட்டங்களைவிட மனித உயிர்கள் முக்கியம்.

மதன் லால்: சின்னசாமி மைதானத்திற்கு வெளியே மக்கள் மரணம் அடைந்த சமயத்தில், மைதானத்திற்கு உள்ளே கொண்டாட்டங்கள் நடந்தன. இது மிகுந்த அதிர்ச்சி, மன வேதனை அளித்தது. இதை மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பெங்களூரு அணி, அரசு மீது ரூ. 100 கோடி கேட்டு வழக்கு தொடுக்க வேண்டும். பி.சி.சி.ஐ., பொறுப்பை தட்டிக் கழிக்கிறது.

சச்சின்: பெங்களூருவில் நடந்தது மிகப் பெரும் சோகம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக வருந்துகிறேன். அனைவருக்கும் மன வலிமையும் அமைதியும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.


அதுல் வாசன்: ரசிகர்கள் மரணத்திற்கு மத்தியில் பாராட்டு விழா நடந்துள்ளது. இது கோலிக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஒருவேளை தெரிந்திருந்தால், விழாவை புறக்கணித்து வெளியேறியிருப்பார். அரசியல்வாதிகளுக்கு இரக்கம் இல்லை. அணியை நடத்தும் கார்ப்பரேட் நிறுவனத்தினருக்கு எதை பற்றியும் கவலை இல்லை. அவர்களுக்கு வருமானம் தான் முக்கியம்.
கும்ளே: கிரிக்கெட்டின் சோகமான நாள். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.


காம்பிர்: வீரர்கள் 'ரோடு ஷோ' நடத்துவதில் நம்பிக்கை இல்லை. 2007ல் இந்திய அணி 'டி-20' உலக கோப்பை வென்ற போது கூட வெற்றி பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஒரு அணியை நடத்துபவர்கள் உட்பட அனைவரும் பொறுப்புள்ள குடிமக்களாக நடந்து கொள்ள வேண்டும். 'ரோடு ஷோ' நடத்த தயாராக இல்லாதவர்கள். அதை நடத்தியிருக்க கூடாது. 11 உயிர்களை பறிகொடுத்ததை ஏற்க முடியாது.


இருதயம் நொறுங்கியது
பெங்களூரு பெண்கள் பிரிமியர் கிரிக்கெட் அணி கேப்டன், இந்திய அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா கூறுகையில்,'' பெங்களூரு மைதானத்துக்கு வெளியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் மரணம் அடைந்த செய்தியை கேட்டவுடன் என் இருதயம் நொறுங்கியது,'' என்றார்.

யாருக்கும் தெரியாது
பிரிமியர் கிரிக்கெட் தொடரின் தலைவர் அருண் துமால் கூறுகையில்,'' வெற்றிக் கொண்டாட்டம் நடக்க உள்ளது குறித்து எங்களுக்கு எவ்வித தகவலும் தெரியாது. இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு சரியான திட்டமிடல் வேண்டும்,'' என்றார்.

பி.சி.சி.ஐ., மவுனம் ஏன்
உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,). இதன் சார்பில் நடத்தப்படும் பிரிமியர் கிரிக்கெட் தொடரில் தான் பெங்களூரு அணி விளையாடுகிறது. ஆனால், பெங்களூரு சம்பவத்தில் மவுனம் காக்கிறது. பிரிமியர் தொடர் ஒளிபரப்பு உரிமம் மூலம் ரூ. 48,390 கோடி வருமானம் கிடைக்கும் நிலையில், பலியானவர்களுக்கு நிவாரண உதவி கூட பி.சி.சி.ஐ., அறிவிக்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement