அரசு விடுதியில் தங்கி படிக்கலாம்; விண்ணப்பிக்க மாணவருக்கு அழைப்பு

உடுமலை; மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர் பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர, தகுதியுள்ள மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியிருப்பதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவியருக்கான 19 வீடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி மாணவர்களுக்கு 8, மாணவியருக்கு, 6; கல்லுாரி மாணவர்களுக்கு 3, மாணவியருக்கு 2 விடுதிகள் உள்ளன.

பள்ளி விடுதிகளில், நான்காம் வகுப்பு முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியரும், கல்லுாரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் மாணவ, மாணவியர் சேரலாம்.

அனைத்து விடுதி மாணவ, மாணவியருக்கும், தினமும் மூன்று வேளை உணவு மற்றும் தங்குமிடம், எவ்வித செலவினமும் இல்லாமல் வழங்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, கல்வித்திறனை மேம்படுத்தும்பொருட்டு, நீட், ஜெஇஇ., நுழைவுத்தேர்வுக்கான வினா வங்கிகள் வழங்கப்படும்.

கல்லுாரி விடுதிகளில், முதலாண்டு தங்கி படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஜமுக்காளம், பள்ளி விடுதிகளில் தங்கி படிப்போருக்கு, ஆண்டுதோறும் பாய் வழங்கப்படும். இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை போர்வை வழங்கப்படும்.

பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம், 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். இருப்பிடத்திலிருந்து, படிக்கும் கல்வி நிறுவனம், குறைந்தபட்சம் 8 கி.மீ., தொலைவுக்குள் இருக்கவேண்டும்; இந்த துார விதிமுறை மாணவியருக்கு பொருந்தாது.

தகுதியுள்ள மாணவ, மாணவியர், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில், பள்ளிக்கான விண்ணப்பங்களை, 18ம் தேதிக்குள்ளாகவும், கல்லுாரி விண்ணப்பங்களை, ஜூலை 17 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.

Advertisement