நிழற்கூரைகளில் சோலார் அமைப்பு பயணியர் கோரிக்கை

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், அமைக்கப்பட்டுள்ள நிழற்கூரையில் சோலார் பேனலை உள்ளடக்கிய விளக்கு அமைக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் பயணியர் நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறத்தை பொறுத்தமட்டில் கோட்டூர் பஸ் ஸ்டாப், பாலிடெக்னிக் உள்ளிட்ட பகுதிகளில் எம்.எல்.ஏ., எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்காக அமைக்கப்பட்ட நிழற்கூரையை, பல இடங்களில், 'குடி'மகன்கள் ஆக்கிரமித்து, மது குடிக்கும் இடமாக மாற்றி வருகின்றனர். இரவு நேரத்தில், மது அருந்திவிட்டு, டம்ளர், வாட்டர் பாட்டிலை அங்கேயே விட்டுச் செல்வதால், பயணியர் அங்கு செல்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

இதனால், பயணியர் மழையிலும், வெயிலும் காத்திருக்கின்றனர். எனவே, பஸ் ஸ்டாப்புகளில் அமைக்கப்பட்டுள்ள நிழற்கூரைகளில் சோலார் பேனலை உள்ளடக்கிய விளக்கு அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயணியர் கூறியதாவது:

நிழற்கூரை அமைக்க, 5 முதல் 7 லட்சம் ரூபாய் வரை செலவிடப்படுகிறது. ஆனால், நாளடைவில், நிழற்கூரை சரிவர சுத்தம் செய்யாவிடில், அதனை பயன்படுத்த முடிவதில்லை. இதனிடையே இரவு நேரங்களில், 'குடி'மகன்கள் தஞ்சம் அடைவதால் அசுத்தம் அதிகரிக்கிறது.

எனவே, சோலார் பேனலுடன் விளக்கு பொருத்த வேண்டும். இரவில் வெளிச்சம் இருந்தால், எவரும் நிழற்கூரையில் தஞ்சம் அடையாமல் இருப்பர். இதற்கான செலவின தொகையும் குறைவு என்பதால், உள்ளாட்சி நிர்வாகங்கள், சோலார் பேனலுடன் விளக்கு பொருத்துவதுடன், முறையாக கண்காணிக்கவும், சுத்தப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாாறு, கூறினர்.

Advertisement