புதர் மண்டி காணப்படும் பாசன வாய்க்கால்கள் துார்வார நிதி ஒதுக்க கோரிக்கை
உடுமலை; அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்க உள்ள நிலையில், புதர் மண்டி காணப்படும், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன வாய்க்கால்களை துார்வார அரசு நிதி ஒதுக்கவேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இதில், பழைய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில், 21 ஆயிரத்து, 867 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்த வாய்க்கால்களுக்கு, அமராவதி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள, தடுப்பணைகள் வாயிலாக, முழுவதும் மண் வாய்க்கால்கள் வழியாக நீர் வழங்கப்படுகிறது.
உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, காரத்தொழுவு, கணியூர், கடத்துார் ஆகிய எட்டு ராஜவாய்க்கால்களும், தாராபுரம், அரவக்குறிச்சி தாலுகாவில், 10 வலது கரை பழைய வாய்க்கால்களும் உள்ளன.
ஒவ்வொரு வாய்க்கால்களும், குறைந்தபட்சம், 8 கி.மீ., முதல், 14 கி.மீ., துாரம் வரை மண் வாய்க்கால் அமைந்துள்ளன.
ஆண்டு தோறும் ஜூன் மாதம், தண்ணீர் திறப்பதற்கு முன், பழைய வாய்க்கால்கள் துார் வார, அரசு சார்பில், குடிமராமத்து திட்டத்தின் நிதி ஒதுக்கப்பட்டு வந்தது. பாசன சங்கங்கள் வாயிலாக துார்வாரப்பட்டு வந்தது.
இரு ஆண்டுகளுக்கு முன், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வாய்க்கால்கள் துார்வார நிதி ஒதுக்கவில்லை.
முழுவதும் மண் வாய்க்கால்களாக உள்ளதால், கரைகள் சரிந்தும், செடி, கொடிகள், புற்கள் என புதர் மண்டியும் காணப்படுகின்றன. மடைகள் அனைத்தும், பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது.
இதனால், பாசனத்திற்கு நீர் திறந்தாலும், பயிர் சாகுபடிக்கு பயன்படுத்த முடியாமல், நீர் வழித்தடம் அழிந்துள்ளது. இதனால், கடை மடை பாசன நிலங்களுக்கு நீர் செல்லாமல், சாகுபடி மேற்கொள்ள முடிவதில்லை.
வரும், 7ம் தேதி, அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்க உள்ள நிலையில், வாய்க்கால்களை துார்வார உடனடியாக நிதி ஒதுக்க, நீர் வளத்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் கூறியதாவது:
அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன கால்வாய்கள் முழுவதும் மண் கால்வாய்களாவும், பல கி.மீ., துாரம், நுாற்றுக்கணக்கான மதகுகளுடன் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பாசன காலம் துவங்குவதற்கு முன், நிதி ஒதுக்கி, வாய்க்கால்கள் புதுப்பிக்கப்படும்.
இரு ஆண்டாக போதிய நிதி ஒதுக்காததால், கால்வாய் கரைகள் சரிந்தும், புதர் மண்டியும், நீர் செல்ல முடியாது. நீர் திறந்தாலும், முழுமையாக பயன்படுத்த முடியாத நிலைக்கு வாய்க்கால்கள் உள்ளன.
பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டும், மண் வாய்க்கால்கள் மூடியும் அடையாளத்தை இழந்துள்ளன.
எனவே, அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தை காப்பாற்றும் வகையில், வாய்க்கால்களை புதுப்பிக்க தேவையான நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும். அல்லது, மாவட்ட நிர்வாகம், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், அனைத்து வாய்க்கால்களையும் துார்வாரி, புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
மேலும்
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு; ஒரு சவரன் ரூ.71,840!
-
சுசி ஈமு ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை
-
சர்வதேச சந்தையில் வலிமை பெறலாம்; ரெப்போ ரேட் குறைப்புக்கு வரவேற்பு
-
ஆன்லைன் வாயிலாக ரூ. 73.27 லட்சம் மோசடி: திருச்சூரை சேர்ந்த வாலிபர் கைது
-
காங்கிரஸ் மூத்த தலைவர் பாலகிருஷ்ண பிள்ளை மரணம்
-
திருப்பூர் மாவட்டத்தில் 5 மாதத்தில் 40 குழந்தை திருமணங்கள்