சாலைகளில் விதிமுறை மீறி 'பறக்கும்' மாணவர்கள் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

உடுமலை, ; புதிய கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், நகரில் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் விதிமுறை மீறி பயணிப்பதை, போலீசார் கட்டுப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

உடுமலை நகரிலுள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் படிக்கின்றனர்.

பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு, முறையான பயிற்சி உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் பலரும் வைத்திருப்பதில்லை.

நகர வீதிகளிலும் விதிமுறைகளை பின்பற்றாமல், அதிவிரைவாக செல்கின்றனர். உரிமம் வைத்திருப்பது ஒருவராகவும், வாகனத்தை ஓட்டுவது வேறு மாணவராகவும் இருக்கின்றனர்.

முறையான பயிற்சியில்லாமல் ஆர்வத்தினால் மட்டும் இரு சக்கர வாகனத்தை ஓட்டுவதால், பலபகுதிகளில் எதிரே வருவோர் விபத்துக்குள்ளாகின்றனர்.

தொலைதுாரத்திலிருந்து நகரப்பள்ளிகளுக்கு வருவதற்கு, பல பகுதிகளில் பஸ் வசதி குறைவாக இருப்பது, டியூசன் செல்வது போன்ற காரணங்களை வைத்து மாணவர்கள் வாகனங்களில் செல்கின்றனர்.

ஐஸ்வர்யா நகர், அனுசம் நகர், எஸ்.வி., புரம், பழநிரோடு, சந்தைரோடு பகுதிகளில், மாணவர்கள் சரமாரியாக வாகனங்களில் செல்வது, பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக காலை நேரங்களில், இருசக்கர வாகனங்களில் எதிரே வருவோரையும் கவனிக்காமல், மாணவர்கள் சாலைகளில் பறக்கின்றனர்.

வாகனங்களில் தலைக்கவசம் அணியாமலும், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், பெற்றோர் உடனில்லாமல் ஆபத்தான பயணம் செய்கின்றனர்.

இவ்வாறு எந்த பாதுகாப்பும் இல்லாமல், மாணவர்கள் உலா வருவதை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி நடவடிக்கை வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement