கலெக்டர் அலுவலக கடைகளை அகற்ற உத்தரவு சங்கத்தினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாக்குவாதம்

விருதுநகர்: விருதுநகரில் உள்ள கலெக்டர் அலுவலக கடைகளை அகற்ற வந்த பொதுப்பணித்துறையினர், போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து சங்கத்தினர்அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கடைகளை அகற்றுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வணிக ரீதியாக நடத்தப்படும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 14 கடைகளை அகற்ற மே 16, 27ல் பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஜூன் 5ல் மாலை 3:00 மணிக்கு அகற்றப்படும் என இறுதி நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இந்நிலையில் நேற்று அகற்ற வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், அவர்களுக்கு பாதுகாப்பாக வந்த டி.எஸ்.பி., யோகேஸ்வரன் தலைமையிலான போலீசாருடன், சங்க நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாலை 6:00 மணி தாண்டியும் பேச்சுவார்த்தை தொடர்ந்ததால், கடைகளை அகற்றாமலே பொதுப்பணித்துறையினர் திரும்பினர்.

அரசு ஊழியர் சங்கத்தினர் கூறும் போது, இந்த கடைகளில்நீதித்துறை ஊழியர் சங்கம், அரசு அலுவலர் ஒன்றியம், பனை வெல்ல வாரியம் போன்றவை நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றுள்ளது.

தீர்ப்பில், காலி செய்ய உத்தரவிடும் அதிகாரம் பொதுப் பணித்துறை தலைமை பொறியாளருக்கு மட்டுமே உண்டு. அவ்வாறு காலி செய்ய நோட்டீஸ் வழங்கினால், ஒப்பந்தம் முடியும் வரை நடத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

தீர்ப்பின் வழிகாட்டல் படியே கடைகளை காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட நிர்வாகத்தின் நிர்ப்பந்தத்தால் அவசர கதியில் காலி செய்வது சரியல்ல, என்றனர். கடை நடத்தி வந்தவர்கள் தங்கள் வாழ்வாதாரமே போய்விடும் எனதவித்து வருகின்றனர்.

சங்கங்கள் இவ்வாறு வணிகரீதியானகடைகள் நடத்தக்கூடாது என்ற உத்தரவு உள்ளதாக உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement