இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை கட்டடம்

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் தெக்களூர் கிராமத்தில், கடந்த 2001 - 02ம் ஆண்டு 5 லட்சம் ரூபாயில் ரேஷன் கடை கட்டப்பட்டது. இந்த ரேஷன் கடையில், தெக்களூர் கிராமம், தெக்களூர் காலனி, கொண்டைய்யாநாயுடு கண்டிகை கிராமம் மற்றும் இருளர் காலனி ஆகிய பகுதிகளில் இருந்து, 900 ரேஷன் கார்டுதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர்.

ஊராட்சி நிர்வாகம் முறையாக ரேஷன் கடையை பராமரிக்காததால், தற்போது கட்டடம் விரிசல் அடைந்தும், மேல்தளம் சேதமடைந்தும் மழைநீர் ஒழுகுகிறது. மேலும், கட்டடத்தின் முன்பகுதியும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதன் காரணமாக, ரேஷன் பொருட்கள் வாங்கும் போது அச்சத்துடன் மக்கள் சென்று வருகின்றனர். இதுதவிர, ரேஷன் கட்டடத்திற்கு தற்போது வரை மின் இணைப்பு இல்லை.

எனவே, ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும் அல்லது இடித்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement