திருத்தணி நகராட்சியில் 44 பூங்கா இடங்களுக்கு...ஆபத்து: ஆக்கிரமிப்பை தடுப்பதில் அதிகாரிகள் அலட்சியம்;தடுப்பு வேலி அமைத்து பாதுகாக்க எதிர்பார்ப்பு

திருத்தணி:திருத்தணி நகராட்சியில் உள்ள 54 பூங்காக்களின் நிலத்தை ஆக்கிரமிப்பதற்கு முன், நகராட்சி நிர்வாகம் பூங்கா இடத்தை அளந்து, தடுப்பு வேலி மற்றும் அறிவிப்பு பலகை வைத்து, பராமரிக்க வேண்டும் என, நகராட்சி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில், 14,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால், நகர மக்கள் பொழுதுபோக்கிற்கு பூங்கா இல்லாமல் இருந்தது.

நகராட்சி அலுவலகம் அருகே இருந்த ஒரெயொரு பொல்லரி முனுசாமி நாயுடு பூங்காவும் போதிய பராமரிப்பு இல்லாமல் இருந்தது. கடந்த 2021ம் ஆண்டு பொல்லரி முனுசாமி நாயுடு பூங்கா, நகராட்சி நிர்வாகம் சார்பில், 25 லட்சம் ரூபாயில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

மேலும், நகராட்சி நிர்வாகம், 21 வார்டுகளில் பூங்காவுக்கான இடங்கள் குறித்து ஆய்வு செய்ததில், மொத்தம் 53 பூங்கா இடங்கள் உள்ளது தெரிய வந்தது. இதில், ஒன்பது பூங்கா இடத்தை தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது தெரிய வந்தது.

தொடர்ந்து, 2022ம் ஆண்டு வாரியார் நகர், காந்தி நகர், நல்லதண்ணீர் குளக்கரை, ஆதிசங்கரர் நகர், பி.எம்.எஸ்., நகர், அமிர்தாபுரம் மற்றும் சுப்ரமணியபுரம் ஆகிய ஏழு பூங்காக்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, தடுப்பு வேலி அமைத்தும், நடைபாதை, விளையாட்டு கருவிகள் அமைத்து பயன்பாட்டிற்கு விடப்பட்டன.

இதுதவிர பாலாஜிநகர், சுப்பிரணியபுரம் ஆகிய இரு இடங்களில், 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான பூங்கா இடத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்தனர். பின், நகராட்சி நிர்வாகம் பூங்கா இடத்தை மீட்டது.

ஆனாலும், தனிநபர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், பூங்காக்களை சீரமைப்பதில் காலதாமதம் ஆகிறது. மீதமுள்ள, 44 பூங்கா இடங்கள் காலி நிலமாகவே உள்ளன. இந்த இடங்களுக்கு நகராட்சி நிர்வாகம் தடுப்பு வேலி, அறிவிப்பு பலகை அமைக்காமல் உள்ளது.

இதனால், பூங்காக்களின் இடத்தை ஆக்கிரமிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, நகராட்சி பூங்கா இடத்தை சுற்றிலும் இரும்பு கம்பிகளால் தடுப்புகள் ஏற்படுத்தியும், 'நகராட்சி பூங்கா' என, அறிவிப்பு பலகை வைத்தும் பராமரிக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து திருத்தணி நகராட்சி அதிகாரி கூறியதாவது:

திருத்தணி நகராட்சியில், மொத்தம் 54 பூங்கா இடங்கள் உள்ளன. தற்போது, எட்டு பூங்காக்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். இரண்டு பூங்கா இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுள்ளோம். தனிநபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், பூங்கா சீரமைப்பு பணிகள் தாமதமாகிறது.

இதுதவிர நகராட்சியில், சத்தியசாய் நகர், அரசு மருத்துவமனை பின்புறம், குமரன்நகர், சேகர்வர்மா நகர், பாலாஜி நகர், ஏ.கே.எஸ். கார்டன், மங்கலகீழார் நகர், திருத்தணிகை நகர் உட்பட 21 வார்டுகளில், 44 பூங்கா இடங்கள் உள்ளன.

பூங்கா இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க, விரைவில் தடுப்பு வேலி, அறிவிப்பு பலகை வைக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பூங்காக்களை நவீனப்படுத்த வேண்டும்

திருத்தணியில் உள்ள பெரும்பாலானோர், காலை மற்றும் மாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். பூங்கா ஏற்படுத்தப்பட்ட இடத்தில் அப்பகுதி மக்கள் அதிகளவில் நடைபயிற்சி, யோகா பயிற்சி மேற்கொள்கின்றனர். பூங்கா இல்லாத இடங்களில் சாலையோரங்களில் நடைபயிற்சியில் ஈடுபடுகின்றனர். இதனால், அதிகளவில் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, 44 இடங்களிலும் உள்ள பூங்கா நிலத்தில் நடைபயிற்சி, விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பூங்கா ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- க.விநாயகம், சமூக ஆர்வலர், திருத்தணி.




நிதி பற்றாக்குறை என சமாளிப்பு




தற்போதுள்ள 44 பூங்காக்களில் பெரும்பாலான இடங்கள் வீட்டுமனை விற்பனை இடங்களில் உள்ளன. இந்த இடங்களுக்கு, நகராட்சி நிர்வாகம் பூங்கா நிலம் என, எந்த அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை. ஆக்கிரமிப்பில் இருந்து தப்பிக்க பூங்காவை சுற்றிலும் தடுப்பு வேலி அமைப்பதற்கு நகராட்சி போதிய நிதி ஆதாரம் இல்லை. இதனால், பூங்காக்கள் உள்ள இடத்தில் தடுப்பு அமைத்து, பூங்காவை நவீனப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு விட முடியவில்லை என, நகராட்சி நிர்வாகம் சமாளிக்கிறது.

Advertisement