வாழை இலை விலை உயர்வு

திருப்புவனம்: வைகாசி முகூர்த்த நாட்களை முன்னிட்டு வாழை இலைகளின் தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.

திருப்புவனம் வட்டாரத்தில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கானுார், மாரநாடு, மடப்புரம், கலியாந்துார் உள்ளிட்ட பகுதிகளில் வாழை பயிரிடப்படுகிறது. நாட்டு வாழை, ஒட்டு வாழை, பச்சை, ரஸ்தாளி, பூவன் என பல்வேறு ரகங்கள் இருந்தாலும் இப்பகுதியில் நாடு, ஒட்டு வாழையே அதிகளவு பயிரிடப்படுகிறது. பெரும்பாலும் முகூர்த்த நாட்களை கணக்கிட்டே விவசாயிகள் வாழை பயிரிடுகின்றனர். கடந்தாண்டு செப்டம்பரில் வாழை நடவு செய்த விவசாயிகளுக்கு தற்போது அறுவடை காலம்.

வைகாசி, ஆனி, ஆவணி மாதங்களில் முகூர்த்த நாட்கள் என்பதால் வாழை இலை, வாழைக்காய், வாழை மரம் உள்ளிட்டவைகள் நல்ல விலை போகும், எனவே விவசாயிகள் அதனை எதிர்பார்த்து காத்திருந்தனர். அறுவடைக்கு முன் பக்க கன்றுகள் மூலம் வாழை இலைகளை அறுவடை செய்வார்கள், ஏக்கருக்கு நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் ஆயிரம் இலைகள் வரை அறுவடை செய்வார்கள்.

கடந்த இரு மாதங்களுக்கு முன் 200 இலைகள் கொண்ட ஒரு கட்டு 500 ரூபாய் வரை விற்பனை செய்த நிலையில் தற்போது ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. நாளை மற்றும் நாளை மறுநாள் முகூர்த்த நாட்கள் என்பதால் விலை உயர்ந்துள்ளது. நல்ல தரமான வாழை இலை கட்டு ஆயிரத்து 800 ரூபாய் என விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement