கூட்டுறவு சங்கங்களில் உரம் இருப்பு வைக்க உத்தரவு தினமலர் செய்தி எதிரொலி

தேனி: தொடக்க வேளாண் கூட்டுறவுச்சங்கங்களில் தேவையான அளவு உரங்கள் கையிருப்பு வைக்க வேளாண் துறை உத்தரவிட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள சில தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா உள்ளிட்ட உரங்கள் கையிருப்பு இன்றி உள்ளன. இதனால் விவசாயிகள் கூடுதல் விலைக்கு வாங்கும் நிலை தொடர்கிறது.

இது தொடர்பாக தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து வேளாண் துறை அதிகாரிகள் குறிப்பிட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் ஆய்வு செய்து, உரங்கள் போதிய அளவில் கையிருப்பு வைக்க அறிவுறுத்தினர். கையிருப்பு இல்லாத சங்கங்கள் உரங்கள் இறக்க டான்பெட் நிறுவனத்திற்கு கடிதம் எழுதி உள்ளனர்.

மேலும், ஜூன் 10க்குள் உரங்கள் கையிருப்பு இல்லாத சங்கங்களில் 350 டன் உர மூடைகள் இருப்பு வைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர்.

Advertisement