1690 எக்டேரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு

தேனி: மாவட்டத்தில் தோட்டக்கலை, வேளாண் துறை சார்பில் 1690 எக்டேர் நிலங்களில் சொட்டுநீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியத்திட்டம் ரூ.42.79 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.

தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது: மாவட்டத்தில் தோட்டக்கலை துறை சார்பில் 740 எக்டேரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.32.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு குறு விவசாயிகள் 2 எக்டர், பெரிய விவசாயிகள் 5 எக்டேர் வரை விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் ஏற்கனவே 7ஆண்டுகளுக்கு முன் பயனடைந்தவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம். இது மானியத்திட்டம் ஆகும். அதிகபட்டம் ரூ. 22 ஆயிரம் வரை மானியம் பெற முடியும் என்றனர்.

வேளாண் துறை சார்பில் ரூ.10.5 கோடி மதிப்பில் 690 எக்டேர் நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட உள்ளது.

இரு துறை சார்பில் மானியத்தில் வழங்கப்படும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண், தோட்டக்கலைஉதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி விண்ணப்பிக்கலாம் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement