சைபர் குற்றவாளிகளுக்கு எதிரான 2 நாள் நடவடிக்கையில் 136 பேர் கைது

3

சென்னை: சைபர் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய இரண்டு நாள் சிறப்பு நடவடிக்கை காரணமாக, 136 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சைபர் குற்றப்பிரிவு தலைமையக கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் நடக்கும் சைபர் குற்றங்களுக்கு எதிராக, கடந்தாண்டு டிச., 6, 7, 8ம் தேதிகளில் மாநிலம் முழுதும், 'ஆப்பரேஷன் திரை நீக்கு-1' என்ற சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது, சைபர் குற்றவாளிகள், 76 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து, கடந்த 2, 3ம் தேதிகளில், இரண்டாம் கட்ட சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக, சைபர் குற்றவாளிகள் பயன்படுத்திய வங்கி கணக்குகள், அவர்களின் நிதி பரிமாற்றம் உள்ளிட்ட தரவுகளின் அடிப்படையில், சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி., ஷஹ்னாஸ் நேரடி கண்காணிப்பில், மாவட்ட வாரியாக சைபர் குற்றத்தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.

இக்குழுக்களின் செயல்பாடுகள், சென்னை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டன. இதன் பயனாக, தமிழகத்தில் பதிவான 159 வழக்குகளில் தொடர்புடைய சைபர் குற்றவாளிகள், 136 பேர் கைது செய்யப்பட்டனர்.

குறிப்பாக, 30க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்ட போலி ஆவணங்கள் வாயிலாக, துவங்கப்பட்ட வங்கி கணக்குகளை பயன்படுத்திய கும்பலை சேர்ந்த ஆறு பேரும் கைதாகி உள்ளனர்.

இவர்களிடம் இருந்து, 125 மொபைல் போன்கள்; 304 வங்கி கணக்குகள்; 88 காசோலைகள்; 107 'டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு'கள்; 36 கம்ப்யூட்டர்கள்; 'போலீஸ்' என சொல்ல பயன்படுத்திய 'ஸ்டிக்கர்' உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இவற்றை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. அதன் வாயிலாக, கைதான நபர்களுக்கு நாடு முழுதும் உள்ள கூட்டாளிகளை தேடும் பணி நடக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement