மின் வினியோகத்தில் அக்கரை காட்டாத தோட்ட நிர்வாகம்

மூணாறு:நிலச்சரிவில் உயிர் பலி அதிகரிக்க மின்சாரம், தொலை தொடர்பு சேவை துண்டிப்பு முக்கிய காரணம் என தெரியவந்ததும் தோட்ட நிர்வாகம் மின் வினியோகத்தில் அக்கரை காட்டுவதில்லை.

மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் 2020 ஆக 6ல் பெய்த கன மழையில் இரவு 10.45 மணிக்கு ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் தொழிலாளர்கள் உள்பட 70 தமிழர்கள் இறந்தனர். கேரளாவை உலுக்கிய அந்த துயர சம்பவம் மின்சாரம், தொலை தொடர்பு சேவை ஆகியவை துண்டிக்கப்பட்டதால் மறுநாள் காலை தான் வெளியுலகுக்கு தெரியவந்தது.

மூணாறு நகர், சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகள் ஆகியவற்றிற்கு கே.டி.எச்.பி. கம்பெனி மின்சாரம் வினியோகிக்கிறது. தோட்ட நிர்வாகம் 2005ல் தொழிலாளர்களுக்கு விருப்பு ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தியது. அதில் ஏராளமான மின் ஊழியர்கள் பணியை விட்டு சென்ற பிறகு சொற்ப எண்ணிக்கையிலான ஊழியர்களை வைத்து பராமரிப்பு பணிகளை செய்து வருகிறது.

அதனால் மழை காலங்களில் பெரும்பாலான நாட்கள் மின்தடை ஏற்பட்டு தோட்ட பகுதிகள் இருளில் மூழ்கி விடும். அதே போல் மின்தடையால் அலைபேசி டவர்களும் செயலிழந்து விடும்.

ராஜமலை பெட்டிமுடியில் உயிர்பலி அதிகாரிக்க மின்தடையும், தொலை தொடர்பு பாதிப்பும் முக்கிய காரணம் என கூறிய கேரள அரசு தோட்ட நிர்வாகத்தை கடுமையாக கண்டித்தது.

அதனை தோட்ட நிர்வாகம் உணராத நிலையில் மின் வினியோகத்தில் அக்கரை காட்டு வதில்லை.

கடந்த வாரம் பெய்த கனமழையில் பல எஸ்டேட்டுகளில் ஒரு வாரம் வரை மின் தடை நிலவியது. அதனால் தொலை தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டது.

பெட்டிமுடி துயர சம்பவத்தை கருத்தில் கொண்டு தோட்ட நிர்வாகம் மின் வினியோகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement