தேசத்துக்கு பணி செய்வது கட்சி விரோத செயலா? காங்., தலைமைக்கு சசி தரூர் மறைமுக கேள்வி

6

புதுடில்லி: ''தேசிய நலனுக்காக பணியாற்றுவதை கட்சி விரோத செயலாக கருதுபவர்கள், எங்களை கேள்வி கேட்பதைவிட, அவர்களை அவர்களே கேள்வி கேட்க வேண்டும்,'' என, காங்., மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சசி தரூர் தெரிவித்தார்.

அரசியல்



'ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு அம்பலப்படுத்த, காங்., -- எம்.பி., சசி தரூர், தி.மு.க., -- எம்.பி., கனிமொழி உள்ளிட்ட ஏழு பேர் தலைமையில், அனைத்து கட்சி குழுக்கள் அமைக்கப்பட்டன.

சசி தரூரின் பெயரை காங்., பரிந்துரைக்காத நிலையில், அவரது தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டதற்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்தது.

கயானா, பனாமா, கொலம்பியா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு சென்ற சசி தரூர் தலைமையிலான குழுவினர், பாக்., பயங்கரவாத ஆதரவை, உரிய ஆதாரங்களுடன் அந்நாட்டு அரசுகளிடம் எடுத்துரைத்தனர்.

இதனால் அதிருப்தி அடைந்த காங்., நிர்வாகிகள், பா.ஜ.,வின் சூப்பர் செய்தித் தொடர்பாளர் போல் சசி தரூர் செயல்படுவதாக விமர்சித்தனர். தற்போது, கடைசி கட்ட பயணமாக, இந்தக் குழுவினர் அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று, வாஷிங்டனில் பி.டி.ஐ., செய்தி நிறுவனத்துக்கு காங்., - எம்.பி., சசி தரூர் அளித்த பேட்டி:

நாட்டின் நலனுக்காக சேவை செய்யும்போது, வெளியில் இருந்து கூறப்படும் கருத்துகளை ஒருவர் கண்டுகொள்ளவே கூடாது.

தேசத்துக்காக பணியாற்றுவது கட்சி விரோத செயல் என கருதுபவர்கள், எங்களை கேள்வி கேட்பதைவிட, அவர்களை அவர்களே கேள்வி கேட்க வேண்டும்.

இங்கு நாங்கள் சுற்றுலாவுக்காக வரவில்லை. நம் நாட்டின் நிலைப்பாட்டை மற்ற நாடுகளுக்கு தெரியப்படுத்த வந்திருக்கிறோம். நாட்டின் ஒற்றுமைக்காக ஒன்றுகூடி இருக்கிறோம். இதில் அரசியல் எங்கிருக்கிறது?

வேற்றுமையில் ஒற்றுமை



என் தலைமையிலான குழுவில், மூன்று மதங்கள், ஏழு மாநிலங்களைச் சேர்ந்த ஐந்து அரசியல் கட்சிகளின் எம்.பி.,க்கள் இடம் பெற்றுள்ளனர்.

இது நம் நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. இக்குழுவிலும் வேற்றுமையில் ஒற்றுமை இருக்கிறது.

இந்தியாவில் நமக்குள் அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இந்தியாவை தாண்டிய உடன், நாம் அனைவரும் இந்தியர் என்ற அடையாளத்தையே பெறுகிறோம்.

பாகிஸ்தானிடம் அமெரிக்கா என்ன பேசியது என்பது தெரியாது.

அந்நாட்டிடம் அமெரிக்கா பல்வேறு விவகாரங்களை பேசியிருக்கலாம். அது அந்நாடுகளுக்கு இடையிலானது.

ஆனால், எங்களை யாரும் வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை. பாக்., தாக்கினால் நாங்கள் மிகக் கடுமையாக தாக்குவோம்; அந்நாடு நிறுத்தினால் நாங்களும் நிறுத்துவோம் என்பதே, இந்தியாவின் செய்தி.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement