கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி; முன்னாள் ராணுவ வீரர்கள், விதவையர்கள் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து முப்படை நலத்துறை இயக்குநர் சந்திரகுமரன் செய்திக்குறிப்பு:

மறுவேலை வாய்ப்பு மற்றும் வருமான வரி செலுத்துவோர் பட்டியலில் இடம் பெறாத முன்னாள் ராணுவ வீரர்கள், விதவையர்கள் தங்கள் குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லுாரி படிப்பிற்கான 2024-25ம் கல்வி ஆண்டுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் முப்படை நலத்துறை மூலம் வரும் 11ம் தேதி முதல் ஜூலை 25ம் தேதி வரை அலுவலக நாட்களில் வழங்கப்படுகிறது.

தகுதியுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் விதவையர்கள் தங்களது அடையாள அட்டையுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், முப்படை நலத்துறையின் வலைதளம் https://sainik.py.gov.in மூலமாக விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.காரைக்கால் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள், கலெக்டர் அலுவலகத்திலும், மாகே மற்றும் ஏனாம் பகுதிகளை சேர்ந்தவர்கள் அந்தந்த மண்டல நிர்வாக அலுவலகத்திற்கும் சென்று விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அசல் பள்ளிக் கட்டண ரசீதுகளுடன் முப்படை நலத்துறையில் வரும் ஆகஸ்ட் 22ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தவறினால், விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement