பா.ம.க.,வுடன் த.வா.க., இணைப்பா? வேல்முருகன் திட்டவட்டம்

கடலுார்; பா.ம.க.,வுடன் இணைய வாய்ப்பில்லை என, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., கூறினார்.

இதுகுறித்து கடலுாரில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பா.ம.க., நிறுவனர் ராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் எனது சகோதரரும், த,வா.க., ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவருமான திருமால்வளவன் சந்தித்து பேசினார்.

இது தொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த சந்திப்பிற்கும், அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ராமதாசுக்கும், அன்புமணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ராமதாஸ் மனம் வருந்தி நிருபர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டதை பார்த்த என் கட்சி நிர்வாகிகளும், நானும் மனம் வருந்தினோம்.

சமூக நீதி தளத்தில் பா.ம.க., தொடர்ந்து பயணித்து வருகிறது. இக்கட்சியில் தற்போது எற்பட்டுள்ள சிறு குழப்பம் தீர விரும்புகிறோம். இந்நிலையில், 'உங்களால் நாங்கள் வளர்க்கப்பட்டோம்; நாங்கள் இருக்கிறோம்' என, ஆறுதல் கூறுவதற்காக எனது சகோதாரர் ராமதாசை சந்தித்தார்.

அன்புமணி என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

நாங்கள் எங்கள் பணியை மேற்கொண்டு வருகிறோம். எனவே வேல்முருகன் பா.ம.க., வில் சேருகிறார் என்றும், அன்புமணிக்கு எதிர்ப்பாக ராமதாசுடன் பயணிக்க உள்ளார் என்று கூறுவதும் உண்மைக்கு மாறான தகவல். பா.ம.க., வுடன் த.வா.க., இணைவதற்கு வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement