பூட்டிய வீட்டில் 44 சவரன் கொள்ளை; திருக்கோவிலுார் அருகே துணிகரம்

ரிஷிவந்தியம்; கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அடுத்த அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் மனைவி செல்வி, 48; இவரது மகன் கவுதமன்,28; மருமகள் ஷர்மி, 26; இருவரும் சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.

கணவர் சுரேஷ் இறந்துவிட்டதால், செல்வி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு, சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு செல்வி சென்றார். இதைத்தொடர்ந்து, மகன், மருமகளுடன் நேற்று காலை 8:00 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த செயின், வளையல், மோதிரம் உட்பட 44 சவரன் நகைகள், ஒரு கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 42 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.

புகாரின்பேரில் திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், பகண்டை கூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் சேட்டு மற்றும் போலீசார், சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர்.

கடலுாரில் இருந்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் மொட்டைமாடி பூட்டை நெம்பி உடைத்து வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement