போலி மதுபானங்கள் விற்ற வழக்கு; இருவர் தடுப்பு காவலில் அடைப்பு

விழுப்புரம்; புதுச்சேரியில் போலி மதுபான ஆலை நடத்தி, தமிழக பகுதியில் மது பாட்டில்களை விற்ற வழக்கில் இருவர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் இனாயத்பாஷா தலைமையிலான போலீசார், கடந்த மாதம் 9ம் தேதி, வானூர் அருகே பூத்துறை சோதனை சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், புதுச்சேரி மதுபானங்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

விசாரணையில், புதுச்சேரி மாநிலம் உளவாய்க்கால் பகுதியில், போலியான மதுபான ஆலை நடத்தி, அதில் போலி மதுபானம் தயாரித்து, தமிழக பகுதிகளில் விற்பனைக்கு எடுத்துச் செல்வதும், அதன்படி 209 அட்டைப் பெட்டிகளில், 10 ஆயிரத்து 32 மது பாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரிந்தது.

இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து, மரக்காணத்தை சேர்ந்த குப்புசாமி மகன் ராஜசேகர்,45; சென்னை ராமாபுரம் செந்தமிழ் நகரை சேர்ந்த சண்முகம் மகன் பாண்டியன், 46; உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர்.

இதில், முக்கிய குற்றவாளிகளான ராஜசேகர்,45; பாண்டியன், 46; ஆகியோரது தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், எஸ்.பி., சரவணன் பரிந்துரையின் பேரில், அவர்களை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டார். இதனையடுத்து, ராஜசேகர், பாண்டியன் இருவரையும், தடுப்புகாவலில் அடைப்பதற்கான ஆணையை, ஆரோவில் போலீசார், கடலூர் மத்திய சிறையில் நேற்று வழங்கினர்.

Advertisement