போலீஸ் கஸ்டடியில் நக்சல்; பழங்குடியின கிராமத்தில் விசாரணை

குன்னுார்; பெங்களூர் சிறையில் இருந்த நக்சல் சுந்தரியை, போலீசார் கஸ்டடியில் எடுத்து, குன்னுார் நெடுகல்கம்பை பழங்குடியின கிராமத்தில், நேரில் அழைத்து சென்று நேற்று விசாரணை நடத்தினர்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே, நெடுகல்கொம்பை பழங்குடியின கிராமத்திற்கு, கடந்த 2016ல் வந்த சில நக்சல்கள், சட்டசபை தேர்தலை புறக்கணிக்க போஸ்டர்கள் ஒட்டி, அரசுக்கு எதிராக பழங்குடியினரை மூளை சலவை செய்தனர்.
அப்போது, நக்சல்கள் சுந்தரி, டேனிஷ், ஷோபா, சாவித்திரி, அரவிந்த், கார்த்தி. மணிவாசகம் உட்பட 7 பேர் மீது கொலக்கம்பை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், மணி வாசகம், அரவிந்த், கார்த்திக் ஆகியோர் பாலக்காடு மஞ்சகண்டி பகுதியில் என்கவுன்டர் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, மற்றவர்கள் கர்நாடகா, தமிழகம், கேரளா உட்பட்ட பல இடங்களில் சுற்றி திரித்தனர். ஷோபா டேனிஷ், சாவித்திரி ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் கர்நாடகாவில் சுந்தரி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சுந்தரியை, 2 நாட்கள் கஸ்டடியில் எடுத்து, நீலகிரி காவல் துறையினர் விசாரிக்க, குடும்ப நல நீதிபதி லிங்கம் அனுமதி அளித்தார். தொடர்ந்து, போலீசார் நெடுகல்கொம்பை கிராமத்திற்கு நேற்று சுந்தரியை அழைத்து சென்றனர்.
அங்கு போஸ்டர் ஒட்டிய இடங்கள், பேசிய இடங்களை, சுந்தரி காண்பித்ததை பதிவு செய்து, குன்னுார் மகிளா போலீசில், நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். மாலையில், அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து, மீண்டும் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெங்களூரு சிறைக்கு அழைத்து சென்றனர்.