மங்கலம் சாலை சீரமைக்க உறுதி பா.ஜ., போராட்டம் ஒத்திவைப்பு

திருப்பூர், ; மங்கலம் ரோட்டில் உள்ள சேதங்களை சரிப்படுத்த கோரி, பா.ஜ., நேற்று போராட்டம் அறிவித்த நிலையில், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக பணிகளை துவக்கியது.

திருப்பூரில் மங்கலம் ரோடு பிரதானமானது. குழாய் பதிப்பு பணிக்கு பல்வேறு இடங்களிலும் குழிகள் தோண்டி ரோடு சேதமடைந்துள்ளது. குண்டும் குழியுமாக உள்ள ரோட்டை கடந்து செல்வதும், வாகனங்களில் செல்வதும் கடும் சிரமமாக உள்ளது.

தீர்வு காண வலியுறுத்தி, கருவம்பாளையம் மண்டல் பா.ஜ., தலைவர் சங்கர் வேண்டுகோள் விடுத்தார். ரோட்டில் உள்ள குழிகளை மரக்கன்றுகள் நட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்த கட்சியினர் தயாராகினர்.மரக்கன்றுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிர்வாகிகளை தொடர்பு கொண்ட மாநகராட்சி பொறியியல் பிரிவினர், மங்கலம் ரோட்டில் நிலவும் பிரச்னைக்கான காரணம்; அவற்றுக்கு விரைவில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை குறித்து விளக்கினர்.

மிக மோசமான நிலையில் ரோடு உள்ள இடங்களில் 'பேட்ஜ் ஒர்க்' செய்ய உறுதி அளிக்கப்பட்டது. நேற்று காலை இப்பணி மேற்கொள்ளப்பட்டது.

ஒரு மாதத்துக்குள் முழுமையாக ரோடு போடப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் ஒத்தி வைக்கப்படும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement