சிந்து நதி ஒப்பந்தம் வேண்டும்: இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்!

5


புதுடில்லி: தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என இந்தியாவுக்கு 4 கடிதங்களை பாகிஸ்தான் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை இந்தியா கண்டுகொள்ளவில்லை.


ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சியது. ஆனால், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு அளிக்கும் ஆதரவை நிறுத்தும் வரை ஒப்பந்தம் மீண்டும் செயல்பாட்டுக்கு வராது என இந்தியா உறுதிபடத் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில்,தற்போது பாகிஸ்தானில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து சிந்து நதி ஒப்பந்தத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அந்நாட்டின் நீர்வளத்துறை செயலாளர் சையத் அலி முர்தாசா, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளார். இதே கோரிக்கையுடன் மேலும் 3 கடிதங்களை அவர் இந்தியாவுக்கு அனுப்பி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.


இந்த கடிதங்களை, மத்திய நீர்வளத்துறை வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில், சிந்து நதிநீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என உலக வங்கியிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement