ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு: குஜராத்தில் காங்., தலைவர் கைது

4

ஆமதாபாத்: ' ஆபரேஷன் சிந்தூர்' குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக குஜராத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராஜேஷ் சோனி என்பவரை போலீசார் கைது செய்தனர்.


காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தியாவின் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் கெஞ்சியதைத் தொடர்ந்து போர் நிறுத்தம் அமலானது.


இந்த நடவடிக்கை தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.


'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பல கேள்விகளையும், ஆதாரங்களையும் கேட்டு வருகின்றனர்.


இச்சூழ்நிலையில் குஜராத் மாநில காங்கிரஸ் பொதுச்செயலர் ராஜேஷ் சோனி, 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து சர்ச்சைக்குரிய வகையில், சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்ததாக போலீசார் கைது செய்து செய்தனர்.


போலீஸ் எஸ்.பி., பாரத் சின்ஹ் கூறுகையில், ராஜேஷின் கருத்து மக்களை தவறாக வழி நடத்துவதுடன், நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பாதுகாப்பு படையினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் கருத்து தெரிவித்தார் எனத் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட ராஜேஷ் சோனி மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 152, 353(1)(a) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement